Thursday, August 26, 2010

சுக்கா? மிளகா?.......சும்மாவா வந்ததிந்த சுதந்திரம் -[பாகம் 2 ]]

அனசுயாபென் சாராபாய்
{ 1885 - 1972 }


தொழிலாளர்களுடைய நலனுக்காக இரசியா, சீனா போன்ற நாடுகளில் பொதுவுடமைச் சித்தாந்தம் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பல்வேறு பிரிவினரால், பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், இந்தியாவில் இதற்கெல்லாம் தாயாகவும், முன்னோடியாகவும் இருந்தவர் அனசுயாபென் சாராபாய்.

அனசுயாபென் சாராபாய் 1885ம் ஆண்டு, ஒரு செல்வச்செழிப்பான , தொழிலதிபர் குடும்பத்தில், அகமதாபாத்தில் பிறந்தார். 19ம் நூற்றாண்டின் இறுதியில், சொந்தமாக நூற்பாலை நிறுவிய வெகு சொற்பமானவர்களில் இவருடைய தந்தையும் ஒருவர். இவருடைய தாய் மிகுந்த ஆன்மீக நாட்டம் கொண்டவர். அனசுயாவிற்குத் தன் தாயின் தாக்கமும் அதிகமாக இருந்தது. இவருடைய பெற்றோர் இவரின் 11 வது வயதிலேயே இறந்து விட்டனர். இதற்குப் பிறகு இவர் தன்னுடைய இளைய சகோதரர் அம்பாலால் மற்றும் சகோதரி காந்தா ஆகியோருடன் தன்னுடைய மாமன் சிமன்பாய் என்பவரிடம் தான் வளர்ந்தார்.

ஒரு பிரபல தொழிலதிபரின் குடும்பத்தில் பிறந்த அனசுயாபென் இன்று அதிக சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிற ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிற, இந்தியாவின் தொழிற்சங்க கூட்டமைப்பபின் அடித் தளத்தை நோக்கி முதல் அடி வைத்தவர் என்பதுதான் மிக ஆச்சரியமான விசயமாகும்.

அனசுயாபென் தோற்றுவித்த நாட்டின் முதல் தொழிற்சங்கமான , நெசவாளர்கள் கூட்டமைப்பே , 50 ஆண்டுக் காலங்களாக தலைமையகமாக செயல்பட்டதோடு, அனைத்து இந்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த செயலகமான, இந்திய தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு மகாசபை [ INTUC ] யின் உருவாக்கத்தை நோக்கிச் செயல்பட்டது. உலகத் தொழிலாளர் அமைப்பு [ ILO ] முன்னாள் இயக்குநரான எலியாச் G. மெபேர் அவர்களின் கணிப்பில், அனசுயாபென்னின் கட்டுப்பாடான, மற்றும் மகாத்மா காந்தியடிகளின் வழிகாட்டுதலின் கீழ் அகிம்சை முறையிலான , பொறுப்பான சேவகர்களான சங்கர்லால் பன்கர் போன்றவர்களின் உதவியுடன் அமைக்கப் பட்ட சங்கமே, இந்திய தொழிற்சங்கங்களின் உருவாக்கத்தின் மூலக் கதையாகும்.

இந்த தொழிற்சங்கம் இன்று இந்தியாவில் உழைப்பாளிகளின் உள்ளத்தில் தன்அழுத்தமான சுவடுகளை பதித்துச் சென்றுள்ளது. இது முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையேயான நல்லுறவுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதோடல்லாமல், தொழில் நலச் சட்டம் [ Industrial Relations Act ], மற்றும் தொழில் தகராறுகள் சட்டம் [Industrial Dispute Act] ஆகியவற்றுடன் இணைந்து செயல்படக் கூடியதுமாகும். மேலும், தொழிலாளர்களின் நலன் மட்டுமன்றி அவர்தம் குழந்தைகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு, அமைக்கப்பட்ட பொதுவான திட்டமாகும் இன்றும் நம்முடைய செயல் திட்ட வல்லுனர்களால், நலத்திட்ட செயல்பாடுகளில் பயன்படுத்தப் பட்டு வருகின்ற ஒரு உன்னத தொழில் தத்துவமாகும்.

தொழிலாளர்களுக்கும், ஏழை எளியோருக்கும் தாயாக விளங்கிய சமுதாய சீர்திருத்தவாதியான அனசுயாபென் ஒரு சிறந்த அறிவாளி, பெண்ணியவாதி மற்றும் தேசியவாதியுமாவார். இவருடைய பன்முகத் திறமைகள் மற்றும் இந்திய சமுதாயத்திற்கான பல வகையான பங்களிப்பு இவருக்கு இந்திய மறுமலர்ச்சியில் ஒரு நிரந்தரமான இடத்தை உறுதிபடுத்தியுள்ளது.

அனசுயாபென் நான்காம் வகுப்பு வரை வீட்டிலேயே படித்தார். பிறகு மேற்கொண்டு படிப்பதற்காக மகாலட்சுமி பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார். ஆனாலும் அவரால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை. காரணம், தான் திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பரீட்சையில் தோல்வியடைந்து கொண்டே இருந்ததுதான். அந்தககால கலாச்சார முறைப்படி இந்தியப் பெண்கள், கணவன்மார்களை விட அதிகமாகப் படிப்பதை அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் தன் சகோதரர் அம்பாலாலுக்குப் பயிற்சி அளிக்கும் போது தானும் உடன் இருந்து கவனித்துக் கொண்டிருப்பார்.

இவருக்கு 12 1/2 வயதாகும் போதே, 1897ம் ஆண்டு, திருமணம் நடந்தது. தன்னைவிட குறைந்த வசதியுடையவருக்கே வாழ்க்கைப் பட்டார் இருப்பினும், இவருடைய வாழ்க்கை கண்ணீரும் கம்பலையுமாகவே இருந்தது. மனம் ஒத்துப் போகாததனால், மண முறிவும் ஏற்பட்டது. இந்த நேரத்தில் அவர் ஆன்மீகப் புத்தகங்களில் அடைக்கலமானார். சுவாமி விவேகானந்தர் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்ததால், அவருடைய பிரபலமான ,'சன்யாசினியின் பாடல்', அவரை வெகுவாகக் கவர்ந்தது. இதனை குஜராத்தி மொழியிலும், மொழிபெயர்த்தார். இந்த தாக்கம் அவரை ஒரு ஜைனத் துறவியாகவும் முடிவெடுக்கச் செய்தது.

ஆனால் டாக்டர். எருள்கர் என்பவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு, அவரை மருத்துவம் படிப்பதற்காக இலண்டன் மாநகரம் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. தன்னுடைய 26ம் வயதில், 1911ம் ஆண்டு, அந்தக் காலத்தின் ஒரு புரட்சிகரமான செயலாக, படிப்பிற்காக, கடல் கடந்து, தனி ஒரு பெண்ணாக வெளி நாடு செல்லத் துணியும் அளவிற்கு அவருடைய குடும்பம் பழைய கலாச்சாரத்திற்கு அடிமையாகாமல் இருந்தது.

இலண்டனில் இருந்த காலம் இவருடைய வாழ்க்கை முறையையே மாற்றியமைத்தது. பிற்காலத்தில் பெரும் தலைவர்களாக மாறிய பல இந்திய நண்பர்களைப் பெரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். இருப்பினும், ஒரு நாள் ஒரு இளம் கன்றுக் குட்டியின் இறைச்சிக் குவியலை இலண்டனின் ஒருஇறைச்சிக் கடையில் பார்த்து மனம் சஞ்சலப்பட்ட அனசுயாபென், தான் மருத்துவப் படிப்பிற்கு தகுதியற்றவர் என்பதை உணர்ந்து கொண்டார். காரணம் தன்னால் மனித உடலை அறுத்து பரிசோதனை செய்வது சாத்தியப் படாது . அதனால் அவர், இலண்டன் பொருளாதாரப் பள்ளியில், [ London School of Economics ] , சமூகச் சேவை குறித்த படிப்பை படிக்க முடிவு செய்தார். இங்குதான் அவர் தன்னுடைய பிற்கால வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இரு பெரும் கருத்துத் தொகுதிகளுக்கு ஆட்பட்டார்.

முதன் முதலில் பிரிட்டானியர் வழி நடத்தும் பெண் வாக்குரிமையை ஆதரிக்கும் பெண்களின் மிகக் கட்டுப்பாடான பெண்ணீய இயக்கத்தின் தொடர்பு கிடைத்தது. இரண்டாவதாக, அவர் , பிற்காலத்தில், தொழிலாளர் நலச் சங்கங்களை இந்தியாவில் முன்மொழிவதற்குக் காரணமாக இருந்த, ஃபேபியன் சோசலிச கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டார்.

1913 ல் தான் தேர்ந்தெடுத்தப் பணிகளுக்கான முழுமையான பரிவாரங்களுடன் இந்தியா திரும்பினார்.

தளர்ந்த மனித உள்ளத்தினைத் தாங்கி நிறுத்தியே
தளர்ச்சிதனைப் போக்கிடும் கை நம்பிக்கை
சோர்ந்து நிற்கும் உள்ளத்தின் இருள் போக்கியே
ஒளி விளக்கு ஏற்றிடும் கை நம்பிக்கை
உறுதி கொண்டு உழைத்தாலே உலகம் ஜெயிக்கலாம்
துணிவு கொண்ட உள்ளத்தினால் அகிலம் ஆளலாம்.

இந்தியா திரும்பிய அனசுயாபென் தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களுக்காகப் பாடுபடுவதென்று முடிவு செய்தார். ஆரம்ப காலத்தில் அவர்களின் நிலை மிக மோசமானதாக இருந்தது. மார்ச் மாதம் 1914 ல் முதலில் நெசவாளர்களின் குழந்தைகளுக்காக, ஜெசோதாபென் என்கிற ஒரு விதவைப் பெண்ணின் துணை கொண்டு, 1916 ல், அமரபுராவில் ஒரு குழந்தைப் பள்ளியை நிறுவினார். தன்னுடைய வாழ்க்கையில் அதுதான் மிக ஆசீர்வதிக்கப் பட்ட கணமாக உணர்ந்தார்.

இந்த சிறிய ஆரம்பம்தான் அவரை, கடனுதவி வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் நிறுவி, அதன் மூலம் தொழிலாளர்களைக் கடன்காரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கச் செய்தது. பிறகு, ஆயுர்வேத மருத்துவமனை, இரவு நேர முதியோர் பள்ளி, பஜனை மடம், ஆரம்பப் பள்ளிகள் தொழிலாளர்களின் பொது நலம், இப்படி படிப்படியாக சேவைகள் தொடர்ந்தன.இந்தச் செயல் பாடுகள் அனைத்தும் உண்மை மற்றும் அகிம்சை வழியிலான நலத்திட்டம் என்கிற பொதுக்கருத்தை ஏற்படுத்த உதவியது. இந்தப் பொதுக் கருத்தே, இன்றைய பலதரப்பட்ட தொழிலாளர் நலத் திட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

1917 ல் அகமதாபாத் நகரில் பிளேக் நோய் தாக்கியது. இதனால் பெரும்பாலானத் தொழிலாளர்கள் தங்களுடைய கிராமங்களுக்கு, பயந்து ஓடினர். இது தொழிற்சாலைகளுக்குப் பெரும் பிரச்சனைகளை உருவாக்கியது. அப்பொழுது, நிர்வாகம் அவர்களை அங்கேயே தங்க வைக்கும் பொருட்டு, அவர்களுடைய கூலியில் 75 % ஊக்கத் தொகையாகக் கொடுப்பதாக அறிவித்தது. ஆனால் வேறு போக்கிடம் இல்லாமல் அங்கேயே தங்க வேண்டியிருந்தத் தொழிலாளர்கள் கூட இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அனசுயாபென்னிடம் வந்து முறையிட்டனர் தொழிலாளர்கள். அவருக்கு இது முற்றிலும் ஒரு புதிய களமாக இருந்தாலும், இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக, அவர்களுடைய நியாயமானக் கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு , ஆவன செய்வதாக ஒப்புக் கொண்டார்.

இதுதான் இந்திய கூட்டுறவுத் தொழிற்சங்கத்தின் முக்கியம் வாய்ந்தத் தருணமாக இருந்தது. முதல் முறையாக, தொழிலாளர்களுக்கான நற்பலன்களைக் கருத்தில் கொண்டு, ஒரு நெறிப்படுத்தப்பட்ட முறையிலான கூட்டு முயற்சி எடுக்கப் பட்டது. அனசுயாபென் முதல் கூட்டத்தை சபர்மதி ஆற்றங்கரையில் கூட்டி, தொழிற்சாலை முதலாளிகளுக்கு 48 மணி நேரக் கெடு கொடுத்தபின், இறுதியில் வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டது.

இதில் இன்னொரு ஆச்சரியமான செய்தி, அனசுயாபென்னின், ச்கோதரர் அம்பாலால்பாய் ஆலை முதலாளிகள் சங்கத் தலைவராக இருந்தது தான். இதையனைத்தையும் எட்ட இருந்து கவனித்துக் கொண்டிருந்த காந்தியடிகள், உள்ளூர் தொழிலாளர்களுக்கு, கூலியை உயர்த்திக் கொடுக்கும்படி அம்பாலாலுக்கு ஒரு கடிதம் எழுதினார். எதிர், எதிர் கொள்கைகள் கொண்ட சகோதரரும், சகோதரியும், ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், அவரவர் கொள்கைகளை மதித்துக் கொண்டு, அடுத்தவரின் வெற்றியையும் பாராட்டிக் கொண்டு அமைதி காத்து வந்தனர். ஆலை முதலாளிகள் கூலியை உயர்த்திக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டனர்.


1917ல் , இந்தியாவின் கூட்டுறவு தொழிற்சங்கத்தின் வரலாற்றில் இந்த வேலை நிறுத்தம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். 1918ல் நெசவாளர்கள் மற்றுமொரு தேவைக் காரணமாக பிரச்சனையைக் கொணர்ந்தனர். இந்த முறை காந்தியடிகள் அந்த வேலை நிறுத்தத்தில் நேரடி ஆவல் கொண்டு அனசுயாபென் மற்றும் ஏனையத் தலைவர்களுக்கும் வழிகாட்டினார். ஆலை முதலாளிகள் கதவடைப்பை அறிவித்தாலும் , இறுதியில் நெசவாளர்களே வெற்றி பெற்றனர். இந்த நேரத்தில் தான் ஆலை முதலாளிகளும், சங்கம் அமைப்பதை விரும்பினர். இறுதியாக 1920ல், முதல் தொழிற்சங்கமான, நூற்பாலை தொழிலாளர் சங்கம் [TLA], உருவானது.

காந்தியடிகள், இந்தச் சங்கம் தொழிலாளர்களுக்குச் சேவை செய்வதற்காக அமைக்கப்பட்டதன்றி, ஆலை முதலாளிகளுக்கு எதிரானதல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும் அவர் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், தனக்கென்று சட்ட திட்டங்கள் கொண்டிருக்க வேண்டும், தொழிலாளர்களை முதலாளிகள் தங்கள் சுயநலத்திற்காக பயன் படுத்திக் கொள்வதும் மற்றும் ஆதிக்கம் செலுத்துவதும் கூடாது. அத்தோடு அந்தச் சங்கம் பொருளாதாரத் தன்னிறைவு கொண்டதாக இருத்தல் வேண்டும், என்று அழுத்தமாகக் கூறியிருந்தார்.இது ஆலை நிர்வாகத்திற்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு அகமதாபாத் நெசவுத் தொழிற்சாலை எந்த ஒரு வேலை நிறுத்தமும் எதிர் கொள்ளவில்லை.

தொழிலாளர்களுடனான இவருடைய மனம் திறந்த நெருக்கமான தொடர்பு, அத்துடன் அம்பாலால்பாயின் ஆக்கப் பூர்வமான செயல்களும் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தியிருந்தன. நூற்பாலைத் தொழிலாளர் சங்கம் [TLA], தொழிலாளர்களின் நலனில் அக்கரை செலுத்துகிறது. தொழிலாளர்களுக்கு, உழைப்புக் கேற்ற ஊதியம் எவ்வளவு அவசியமோ, அது போன்று அவர்கள் மது மற்றும் போதைப் பழக்கம் கொண்டிருக்கக் கூடாது. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கடன் வாங்கும் பழக்கம் இருக்கக் கூடாது. நல்ல உடல் ஆரோக்கியமும் கல்வியும் கொண்டிருக்க வேண்டும். ஒழுங்கான குடியிருப்பும் மற்றும் போதுமான சமூகப் பாதுகாப்பும் இருத்தல் வேண்டும். மேற்கண்ட கருத்துக்களில் அனசுயாபென் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராகவும், அதற்காகப் பாடுபடுபவராகவும் இருந்தார்.அவர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகளைக் கண்டறிந்து, அதற்கானத் தீர்வுகளையும் பகுத்தாய்ந்தார்.

தொழிலாளர்கள் தங்களுடைய மிகக் கடுமையான நேரங்களில் கூட, அனசுயாபென்னைத் தாயாகவும், சகோதரியாகவுமே, பார்த்ததில் எந்த அதிசயமும் இல்லை. காந்தியடிகளின் கொள்கைகளுக்கு முழு உருவம் கொடுத்தவரும் அனசுயாபென்தான். செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தன் தோற்றத்தில் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். சேரிகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளின் நலனிலும் அக்கரை செலுத்தி வந்தார். காந்தியடிகளுடன் சந்திப்பு ஏற்பட்டவுடன் அவருடைய வாழ்க்கை முறை மிக எளிமையாகிவிட்டது.

அனசுயா பென் பெண்ணுரிமை மற்றும் பெண் விடுதலை இவைகளில் நம்பிக்கை கொண்டவராவார். அவருடைய நடத்தையில், துணிச்சலும், தைரியமான போக்கும் இருந்தது. பெண்கள் முக்காடிட்டுக் கொண்டு வீட்டின் உள்ளேயே அடைந்துக் கிடந்த அந்தக் காலத்தில், ஆண்களிடம் சரி சமமாகப் பழகுவதிலும், முக்காடில்லாமல் வெளியே செல்வதிலும் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருந்தார். புதிய செய்திகளை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

பொறுமையும், தனித் திறமைகளும் கொண்டிருந்த அனசுயாபென், ஒரு செயல் வீரர் என்றால் அது மிகையாகாது !! தொடரும்.

Wednesday, August 25, 2010

துன்பமே.............தூரப் போ................

இன்பம் மட்டுமே என் வாழ்க்கையில் நிரந்தரம். துன்பத்திற்கு அங்கே இடமில்லை என்று உறுதியாக எண்ணுபவர்கள், இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டியத் தேவையில்லை.

கோடைக் காலமும், குளிர் காலமும், மாறி, மாறி வருவது போல, வாழ்க்கையிலும் இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவதும் இயற்கையே! இன்பம் வரும் போது குதூகலிக்கிற மனது, துன்பம் வரும் போது துவண்டு விடுகிறது.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருண்ட பகுதி என்பது ஒன்று உண்டு, என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த இருண்ட பகுதி ஒவ்வொரு நாளும் கடந்து போய்க் கொண்டேதான் இருக்கிறது. அந்தச் சூழலை ஏற்றுக் கொள்வது எளிதான காரியம் அல்ல என்றாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் படிப்படியாக, அந்த ரணம், மறதி என்ற மருந்தினால் ஆற்றப் படுகிறது என்பதே நிதர்சனம்.

இந்த உலகத்தில் ஏதும் நிலைத்து நிற்பதில்லை. அது துன்பங்களுக்கும், துக்கங்களுக்கும் கூடப் பொருந்தும். பல துன்பங்கள் நாமாக அதை புதுப்பிக்காத பட்சத்தில், வெகு குறைந்த நேரமே நிலைக்கக் கூடியதாகிறது. தம்மைத் துரத்தி வரும் துன்பத்தை, திரும்பி நின்று ஏறிட்டால் போதும், கண்டிப்பாக அது கடந்து ஓடியே போய்விடும்.

பயணம் செய்யும் படகில் அடைக்க இயலாத ஓட்டை விழுந்தால் அதை தேவையில்லாமல் சரி செய்ய முயற்சிப்பதை விட்டு, வெளியில் வர வேறு உபாயம் தேடுவதே அந்த நேரத் தேவையாகும்.

வாழ்க்கையில் நிலையான ஒன்றே ஒன்று மாற்றங்கள்தான். மாற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அந்த மாற்றங்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும். அதன் மூலம் இருண்ட பாதையை முழுக்க அடைத்து விட்டு, அதிலிருந்து மீண்டு ஒளிமயமான மறு பாதையை நோக்கி நம்பிக்கையோடு நடைப் போட முடியும்.

சில மாதங்களோ, சில நாட்களோ, சில நிமிடங்களோக் கூட நினைவில் நிலைத்து நிற்க முடியாத அந்த நிகழ்வுகளை, ஏன் உணர்வுப் பூர்வமாகக் கட்டுண்டு வேதனைப் பட வேண்டும்? காலம் அனைத்து துக்கங்களையும் மறக்கச் செய்யும் மருந்துதான். ஆயினும் அந்தக் காலத்திற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை, "உடனே மறந்து விடு".

இந்தப் பகுதி எழுதுவதற்கும், படிப்பதற்கும் சங்கடமான ஒன்றாக இருந்தாலும், என்றாவது ஒரு நாள் இதயம் பிளக்கும் துன்பத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. காரணம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ஏதோ ஒரு வகையில், சொந்த இழப்பு நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. வாழ்க்கையின் அந்த துக்கம் ஒரு பகுதியாகும். இந்த இடத்தில் வியாக்கியானத்திற்கு வேலை இல்லை. மீண்டு வரக் கூடிய உபாயம் தான் அவசியம்.

என்ன செய்யப் போகிறோம்?
என்ன செய்ய முடியும் ?

என்ன செய்ய வேண்டும் ?

முழு நம்பிக்கை வைத்து ஒரு காரியம் செய்ய முற்பட்டால், அதற்குரிய சக்தி தானாகக் கிடைக்கும் என்பதே இயற்கை விதி!

மனம் தளராத நம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை உடைய ஒருவர் வாழ்க்கையில் எந்த ஒரு துக்கமான சூழ்நிலையிலும், " என்னால் கண்டிப்பாக இந்தச் சூழலையும் கையாள முடியும், அதை நான் செய்யப் போகிறேன் ", என்றே முதலில் எண்ணுவர்.

என் தோழி ஒருவரின் அனுபவமே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சசிகலா, தன் கணவர், இரண்டு குழந்தைகளுடன் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தாள். கணவர் ஒரு தொழிலதிபர். ஒரு நாள் இரவில் தூங்கி, காலையில் எழும் போது கணவருக்கு பக்க வாதம், கடுமையாக தாக்கியிருந்தது. திடீரென்று எந்த எச்சரிக்கையும் இல்லாமல் அவரை படுத்தப் படுக்கையாக்கி விட்டது. அவர் பார்த்துக் கொண்டிருந்த வியாபாரமும் ஸ்தம்பித்து நின்றது. சசிகலா பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாள். என்ன செய்வதென்று புரியாமல், நிலைகுலைந்து போனதென்னமோ உண்மைதான். மூன்றாம் மனிதரை நம்பி தொழிலையும் விட முடியாத நிலை. குழந்தைகளின் படிப்பு, குடும்ப பராமரிப்பு, கணவரின் வைத்தியம் இப்படி அனைத்தும் ஒன்று சேர்ந்து அவளை அலைக்கழித்தது.

அவள் மனதில் தோன்றிய முதல் கேள்வி, தான் எப்படி அதை ஈடுசெய்யப் போகிறோம் என்பதுதான். அடுத்து, அந்தச் சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்தே ஆக வேண்டும் என்ற உறுதியான தீர்மானம் கொண்டாள்.

அவர்களுடைய குடும்ப நண்பரின் ஆலோசனையுடன், தந்தையை உடன் வைத்துக் கொண்டு, தானே வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுத்தாள். கணவரிடம் முக்கியமான ஆலோசனைகள் பெற்று, வங்கியில் காசோலை மாற்றுவது முதல், ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டாள். இன்று குடும்பம், தொழில் என்று பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறாள்.

ஆக்கப்பூர்வமான சிந்தனை [optimist] உடையவர்கள் என்றும், எல்லாம் எளிதாகச் சரியாகிவிடும் என்ற எண்ணத்துடனே இருப்பார்கள். அதனால் அதற்கேற்றார்போல் செயல்படவும் ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள், அது எத்தகையச் சூழ்நிலையாக இருந்தாலும், அதைத் தன்னுடைய முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு பயன் படுத்திக் கொள்வார்கள். இப்படித்தான் சசியும், ஒரே வருடத்தில், தேர்ந்த வியாபாரியாகி விட்டாள். தன் கணவரும் ஓரளவிற்கு உடல் தேறி, இன்று, உடன் இருந்து உதவி செய்யும் வகையில் உள்ளதால் இன்னும் நன்றாகத் தொழிலைத் தொடர முடிகிறது அவளால்.

உண்மையிலேயே சில சூழ்நிலைகள் மிகுந்த கொடூரமானவையாகிற போது ஆக்கப் பூர்வமான சிந்தனையோடு எதிர் கொள்ள முடியுமா என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. விஜியின் கணவர், ஊர்க்காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், தன்னுடைய 35வது வயதில் திடீரென மாரடைப்பால் இறந்து போனார். நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் ஆறுதல் கூறிவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் அவள் மனதில் ஒரு பீதி கிளம்பியது. இரண்டும் பெண் குழந்தைகள். குழந்தைகளின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியானது. அப்பொழுதுதான் அவள் தன் சக்தி முழுதும் துக்கத்திலேயே கரைந்துப் போனதை உணரத் தொடங்கினாள்.

வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்தது. தன் புதிய வாழ்க்கையை குழந்தைகளுக்காக வாழ முடிவு செய்தாள். அடுத்த நாளைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல், பெரிய எதிர் காலத் திட்டம் எல்லாம் தீட்டாமல் அன்றைய பொழுது கழிந்தால் போதும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

எதிர்காலத்தைப் பற்றி தீவிரமாக யோசிக்கும் போதுதான் வாழ்க்கை மலைப்பாகத் தோன்றும். எந்தக் காரியமாக இருந்தாலும் அதைச் சிறு பாகங்களாகப் பிரித்துப் பார்க்கும் போது அதனை கையாள்வது எளிதாகும். வாழ்க்கை முழுவதும் எப்படி ஓட்டப் போகிறோம் என்று எண்ணுவதைவிட அடுத்த 15 நிமிடத்தை எப்படி கடக்கப் போகிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தாலே போதும், அன்றாடப் பணிகளைக் கவனிக்கக் கூடியத் தெளிவு பிறந்து விடும். இன்று விஜி தன் கணவர் விட்டுச் சென்ற அதே ஊர்க்காவல் அலுவலகத்தில் எழுத்தராகத் தன் பணியைத் தொடர்ந்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்தும் விட்டாள்.

தவிர்க்க முடியாத அது போன்ற, சூழலை வெற்றி கொள்ள முதலில் வேண்டியது, அந்த சூழலைப் பற்றிய உண்மையான விழிப்புணர்வு. அதாவது ஏற்றுக் கொள்ளச் சிரமமான உண்மைகளை புறக்கணிக்காமல் இருக்க வேண்டியது, மிக அவசியம். ஏதோ ஒரு ஆழ்ந்த திடமான நம்பிக்கையை ஆதாரமாக்கிக் கொள்ள வேண்டும். அக்கரை கொண்ட உறவினர்கள், நல்ல நண்பர்கள் இவர்களின் ஆதரவை ஏற்றுக் கொள்ளத் தயங்கக் கூடாது. காரணம் அது பெரும் பலமாகும்.

திடீரென்று ஏற்படுகிற, உயிர் கொல்லும் வியாதி, ஊனம் இப்படி வாழ்க்கையில் எதிர்பாராமல் எது நடந்தாலும் அதனை எதிர் கொண்டு சமாளித்துப் போராடி வெற்றி கண்டவர் பலர். வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது, என்பது அனைவரும் அறிந்ததே. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி வாழ்ந்தேத் தீருவது என்ற வைராய்க்கியம் இருந்தால் போதும். இப்படி ஒரு முறை சமாளித்தவர்கள் எப்பேர்ப்பட்ட சவால்களையும் கண்டு அஞ்சாமல், எந்தச் சூழலையும் எளிதாக வெற்றி கொண்டு விடுவார்கள்!!

Monday, August 23, 2010

சுக்கா? மிளகா?.....சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்



”அடுப்பு ஊதும் பெண்ணிற்கு படிப்பு எதற்கு?” என்ற பழமொழியைச் சொல்லி பெண்ணை ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்த்த சமூகம், அவளை மதித்து, ஒரு உயிர்ப் பொருளாக, மனித நேயத்தோடு பார்க்கத்தொடங்கியுள்ளது. இன்று பெண் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.இந்த நூற்றாண்டுகளாக இந்தியப் பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகியுள்ளன. ஆதி காலத்தில் ஆண்களுடன் சம நிலையும், மத்தியக் காலங்களில் சில உரிமைகள், பின் உரிமை மறுப்பு, இப்படி , பல்வேறு பரிமாணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் எட்டியிருக்கின்றன.

இன்றைய நவீன இந்தியாவில், பெண்கள் , குடியரசுத் தலைவர், பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர், விமான ஓட்டிகள், அணு விஞ்ஞானிகள், இப்படி அனைத்து உயர் பதவிகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய நிலையை அடைவதற்கு எத்துணைப் போராட்டங்கள், வலிகள், அவமதிப்புகள், பகடிகளைத் தாண்டி, இந்தச சாதனைகளை பெண்கள் புரிந்துள்ளார்கள் என்பதை இளம் சமுதாயத்தினர் உணர வேண்டும். இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூகக் கொடுமைகளிலிருந்து, அவர்களை மீட்டெடுக்கவும், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், கல்வியறிவூட்டுவதிலும், மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்குரிய, அங்கீகாரத்தையும், பாதுகாத்துத் தருவதில், அசாத்தியமான திறன் கொண்ட முன்னோடிகளான பல பெண்கள் தங்கள் வாழ்க்கையையே அர்பணித்துள்ளார்கள்.

அவர்களுடைய உழைப்பும், முயற்சியும், இன்றைய மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவும் ஒரு பொக்கிசமாகும். தங்களுடைய தியாகச் சிந்தையினாலும், கடமையுணர்வினாலும், பெருமுயற்சி கொண்டு, மற்றைய பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றி, சமுதாயத்தில் தன் சுவடுகளை பதியச் செய்த, பல வீர மங்கைகளின், வாரலாற்றுச் செய்திகளின் தொகுப்பே இத் தொடராகும். நம் நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சீர்திருத்தப் போராட்டத்தில் பெண்களின் பங்கு ஒரு வீர காவியக் கதையாகும்.


லேடி அபேலா போஸ்
[ LADY ABALA BOSE ]
{ 1865 - 1951 }

1865 ம் ஆண்டு பிறந்த லேடி அபேலா போஸ் ஒரு அசாதாரணமான வாழ்க்கை வாழ்ந்த ஒரு சாதனைப் பெண்மணியாவார். இவர், ஒவ்வொரு இந்தியரும் பெருமைப் படக்கூடிய, உலகப் புகழ் விஞ்ஞானியான சர். ஜெகதீசு சந்திர போஸ் அவர்களின் மனைவி. பார் போற்றும் விஞ்ஞானிக்கு ஒரு நல்ல தகுதிவாய்ந்த மனைவியாகவே வாழ்ந்தவர். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காகப் பாடுபடுவதையே தன்னுடைய வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

நாம் சுதந்திரமடைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆனபிறகு இன்று அரசு சார்ந்த மற்றும் தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய நிறுவனங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் சென்ற நூற்றாண்டுகளின் காட்சிகளே வேறு.

பால்ய விவாகம், பலதார விவாகம், பெண்கள் கல்வியறிவு பெறுவதைத் தடைச் செய்து, பொருளாதார ரீதியாக ஆண்களையே முழுதும் சார்ந்திருப்பது போன்ற மூடப் பழக்கங்கள், சமுதாயத்தின் முக்கிய மையங்களையே தின்று கொண்டிருந்தன.

திறமை வாய்ந்த , சமுதாய சீர்திருத்தவாதிகளால் தீவிரமான முயற்சிகளின் மூலமாக சட்டப் பூர்வமாகச் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. பொருளாதாரத்தில் முடமாகிப் போன பரிதாபத்திற்குரிய கைம்பெண்கள் அல்லது ஆதரவற்றோர் ஆகியோரின் கல்வியறிவின்மையை எதிர்த்துப் போராடக் கூடிய போதிய மேடைகள் இல்லாதிருந்தது.

ஐஸ்வர்சந்த்ர வித்யாசாகர் மற்றும் ராஜா ராம் மோகன் ராய் போன்ற சில கட்டுறுதி மிக்கத் தலைவர்கள், சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கான அயராத உழைத்தனர். தேச மறுமலர்ச்சி அந்தச் சிந்தையில் புதிய பரிமானத்தைக் கொண்டு வந்தது. அதன் விளைவாக பெண்கள் சம்பந்தமான மூட நம்பிக்கைகள் பெரும் மாற்றத்திற்குள்ளானது.

“ கல்வியில்லாப் பெண்கள் களர்நிலம் போல-அங்கே
புற்கள் விழைவதுண்டு நல்ல புதல்வர்கள் விளைவதில்லை”

போன்ற வார்த்தைகள் உரக்க எழுப்பப்பட்டன.

இந்தச் சூழலில் வளர்ந்த இளைஞர்கள் மற்றும் இளைஞிகளில் அச் சமூகப் பிணியைத் தீர்ப்பதில் பெரும் தொண்டாற்றியவர்களுள் லேடி அபேலாவும் ஒருவராவார்.

இவர் சமூகச் சேவையில் நாட்டம் கொண்ட ஒரு நேர்மையான ஆத்மாவாக இருந்தார். பெண்களின் அடிமைத் தளையைத் தகர்க்க வேண்டுமெனில், முதலில் அவர்களிடம் சுய மரியாதையை மீட்டுக் கொண்டு வருவது மூலமாகத்தான் சாத்தியப் படும் என்று நம்பினார்.

தன் மதிப்பு உயர வேண்டுமானால், அதனைத் தாங்கிப் பிடிக்கக் கூடியத் தூண்களான, கல்வியறிவு, தன்னம்பிக்கை மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவைகளின் அவசியத்தையும் உணர்ந்திருந்தார். இவருடைய இந்த நம்பிக்கைகளின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக வங்கப் பெண்களின் கல்வி குறித்தக் கலந்தாய்வில், அவர் முன்வைத்த, " வங்கத்துப் பெண்களின் ஆரம்பக் கல்வியின் இன்றைய நிலை" , என்ற தலைப்பிட்ட அறிக்கையின் மூலம் வெளிப்பட்டது.

அந்த அறிக்கையில், " இன்றைய பரந்த உலக முன்னேற்றத்தில், ஒரு நாட்டின் முன்னேற்றம் ஆரம்பக் கல்வியின் அடிப்படையிலேயே உள்ளது என்று கருதப் படுகிறது. இந்தியாவில் பலதரப்பட்ட சமுகக் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவைகளின் பிடியில் சிக்கியிருந்தப் பெண்களுக்கு ஆரம்பக் கல்வி எண்ணிலடங்கா நன்மைகளைப் புரிந்துள்ளது. பால்ய விவாகம் என்கிற கொடிய வழக்கம் கட்டுப் பாட்டிற்குள் வந்துள்ளது. ஒரு பெண் தன்னுடைய கல்வியை 12 வயது ஆரம்பத்திலேயே முடிவிற்கு கொண்டு வந்து அடுத்து ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவருடைய திருமண வாழ்க்கையும் ஆரம்பித்து விடுகிறது.," என்று கூறியிருந்தார்.

வங்க தேசப் பெண்களுக்காக அவர்களின் ஏழ்மையைப் போக்கி, தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக, 1919ம் ஆண்டு, லேடி அபேலா போஸ், " பெண்கள் கல்விக் குழு", [ Nari siksha samithi ] ஒன்றை தன் கணவரின் உதவியுடன் நிறுவினார். இந்த உயர்ந்த இலட்சியத்திற்கு கல்கத்தாவின் அன்றைய மேயரான,தேச பந்து சித்தரஞ்சன் தாஸ், நகராட்சிக்குச் சொந்தமான ஒரு துண்டு நிலத்தைக் கொடுத்து உதவினார்.இவர் அன்றைய சமுதாயப் புரட்சியாளர்களான வித்யாசாகர், குருதேவ் ரபீந்திரநாத் தாகூர் மற்றும் சகோதரி நிவேதிதா ஆகியோரின் உதவியையும் பெற்றார். ஜர்கிராம் நகரத்தின், வீரேந்திர மல்ல தேவ்வின் உதவியுடன், குல மரபு சார்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒரு மையத்தை நிறுவினார். இதுபோன்று, பெண்களின் முன்னேற்றத்திற்கானத் தன்னுடைய உறுதிப் பாட்டை அமைதியாகவும், சுயநலமில்லாமலும் செயல்படுத்தினார்.

இந்தியப் பெண்களின் புதிய நம்பிக்கை விடிவெள்ளியுடன், ஒரு சில படித்தப் பெண்களே, பெண்களின் சமூகச் சீர்கேடுகளை, சீர்திருத்த முன் வந்தனர்.பெரிய நகரங்களில் ஆர்வமிக்க பெரும் முயற்சிகளும் மேற் கொள்ளப் பட்டது. நாட்டுப் புறம் சார்ந்த நகரங்களில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தன் உதவிக் கரம் நீட்டி ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தார், லேடி அபேலா போஸ்.

1919ம் ஆண்டில், மூன்று பெண்கள் கல்விக் கூடங்கள் கல்கத்தாவில் நிறுவப்பட்டதோடு, 1921லிருந்து, அவருடைய, நாரி சிக்ஷா சமிதியின், செயல்பாடுகள், கிராமங்களை நோக்கி நீண்டது.. கூட்டுக் குடும்பங்களின் பிளவு காரணமாக வங்க தேசத்தின், விதவைப் பெண்களின், மோசமான நிலையை அனுமானித்த, அபேலா போஸ், அவர்களை ஆரம்பப் பள்ளிகளின் ஆசிரியைகளாக நியமனம் செய்தார்.இதற்கான பயிற்சி, வித்யாசாகர் பால பவனில் அளிக்கப் பட்டது. பால்ய விவாக வழக்கம், வீழ்ச்சியடைய ஆரம்பித்தவுடன், அவருடைய பார்வை, பொருளாதாரத்தில் நலிவடைந்த இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களின் புணரமைப்பு மற்றும் அவர்களுடைய கல்வி நிலையை மேம்படுத்துவது போன்றவற்றில் திரும்பியது. நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இதற்கான பல மையங்கள் நிறுவப்பட்டு, செயல்படுத்தவும்பட்டது.

தன் கணவர் இறந்த பிறகு 1920ஆம் ஆண்டு வாக்கில்,தன் கையிருப்பிலிருந்து சுமார் ஒரு லட்சத்தை சகோதரி நிவேதிதா நடத்திவந்த மகளீர் மேம்பாட்டு நிதிக்கு நன்கொடையாக அளித்த கொடை வள்ளல் அபேலா போஸ்.

நம் நாடு சுதந்திரம் அடைந்து, 50 ஆண்டுகளுக்குப் பிறகு கூட, லேடி அபேலா போஸ் நிறுவிய கல்விக் கூடங்கள், மற்றும் பெண்களுக்கு வருமானம் ஏற்படுத்தக் கூடிய பயிற்சி மையங்கள் இவையனைத்தும், பல் வேறு சமூகச் சேவை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப் பட்டு, அரசாங்க செயல்திட்டத்தின் முக்கியப் பகுதியாக விளங்கினாலும், லேடி அபேலா போஸ் என்றுமே, பெண்களின் நலத்திற்காகவும், குறிப்பாக இளம் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த கைம்பெண்களின் தேவைகளுக்கான வழிகாட்டிகளின் முன்னோடியாகவே கருதப் படுகிறார்.----தொடரும்.