Thursday, February 10, 2011

அடைப்புக்குறிக்குள் ஒரு உள்ளம்.

அடைப்புக்குறியினுள் ஒரு உள்ளம்

வரைவிலக்கணம் வகுப்பதில் வல்லவர் அந்த விஞ்ஞானி. உலகில் உள்ள எந்தப் பொருளாயினும் அதற்கு அழகான வரைவிலக்கணம் கொடுத்து விடுவார்.

ஒரு முறை ஒரு பெருங்கூட்டத்தில் உரையாற்ற அவரை அழைத்திருந்தனர்.

அங்கு ஒவ்வொருவரும் ஒரு பொருளைக் காட்டி அதன் வரைவிலக்கணம் கேட்டுக் கொண்டிருந்தனர். அவரும் தயங்காமல் எல்லோருக்கும் விடை பகர்ந்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒருவர் எழுந்து,’ஐயா அன்பு என்பதன் வரைவிலக்கணம் யாது ?’ என்று வினவினார்.

சற்று நிதானித்த விஞ்ஞானி, ‘கொடுக்கல், வாங்கல்’, என்றார்.

உடனே அவர், அப்பொழுது கொடுத்தல் இல்லையென்றால் வாங்குதல் இல்லையா? அப்படியானால், அன்பு வியாபாரப் பொருளா, என்றார்.

உடனே அந்த விஞ்ஞானி, ‘இல்லையில்லை, அன்பு நிலையான ஒரு குணம்’, என்றார்.

அதற்கு அவர், நிலையில்லாவிட்டால் அது அன்பு இல்லையா? என்று வினவினார்.

உடனே அந்த விஞ்ஞானி இல்லையில்லை, அன்பு என்பது அடிமைப்படுத்துவது என்றார்.

அப்பொழுது, அன்பில்லாவிட்டால் சுதந்திரப் பறவைகளா, மனிதர் என்றார்.

விஞ்ஞானியோ, உடனே, ‘இல்லையில்லை, வாழ்க்கை எனும் குருச்சேத்திரத்தில் சங்காகவும், புல்லாங்குழலாகவும் இருப்பது அன்பு என்றார்.

உடனே அவர், அப்போது அன்பு என்றாலே, போராட்டம் மட்டும்தானா என்று கேட்டார்.

இல்லையில்லை, ஆத்ம நாதத்தின் வெளிப்பாடே அன்பு என்றார்.

அப்பொழுது ஆத்ம சக்தியில்லாத உயிர்களிடத்தில் அன்பு இருக்காதா, என்றான்.

அடைப்புக்குறிக்குள் தாங்கிப்பிடிப்பது அன்பு என்று கூடக் கொள்ளலாம், என்றார்.

ஓ, அப்படியானால் ஊன்றுகோலாக இருப்பதுதான் அன்பு என்பதா?

இல்லையில்லை, அது ஒரு தங்கக்கூண்டு என்றார் அந்த ஞானி.

ஓ, அப்பொழுது அன்பென்பது சொந்தச் சிறையா?

அந்தச் சிறையின் எப்படிப்பட்ட கைதியாய் நீ இருக்கப் போகிறாய்?

ஒரு நத்தை கூட்டிற்குள் சுருண்டு கிடப்பதைப் போலவா?

சிறகுவிரித்து சுதந்திரமாய் இருக்கப் போகிறாயா?

தங்கக் கூண்டின் திறவுகோலை உன் வசம் கொண்டவனாய் இரு.

உன் சுவாசக் காற்றிற்கு அணை போடாத சிறையாக இருக்க வேண்டுமா?

கூண்டின் எல்லையை விரிவாக்கிக் கொள்.

சுதந்திரக் காற்றை இன்பமாக, பாதுகாப்பாக சுவாசிக்கும் கலையை கற்றுக் கொள்!

வெற்றி உனதே!


Tuesday, February 8, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -3


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி - 3.

சில நேரங்களில் சில விசயங்கள் நம் சக்திக்கு மீறி நடக்கும். காரணம் புரிபடாது. வேண்டும் என்றால் விலகி ஓடும், வேண்டாம் என்று விலக நினைத்தால் விரும்பி நெருங்கி வரும். வாழ்க்கையில் பல சம்பவங்கள் இப்படி இது போல நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

எப்படியாவது, திருக்கூட்ட யாத்திரையை தவற விடாமல் சென்று சேரவேண்டும் என்ற உறுதிப்பாட்டில்தான், இரயிலில் நின்று கொண்டே கூட பயணம் செய்தால் பரவாயில்லை என்று துணிந்து முடிவெடுத்து வந்து விட்டோம்.. ஆனால் வந்து சேர்ந்ததோ, மிகக் கடினமான நேர இடைவெளியில். மகிமாலீஸ்வரரின் கடைக்கண் பார்வை பட்டால் போதுமே, பட்ட பாடு அத்துணையும் வரமாகக்கூடும் என்ற நம்பிக்கை மட்டும் நிறையவே இருந்தது.

சரியாக 5.15 மணிக்கு பேருந்து புறப்படக்கூடிய இடமான மகிமாலீஸ்வரர் ஆலயம் முன்புற வாயிலுக்குச் செல்வதற்கான வழிப்பாதையில் இருக்கிறோம். பேருந்து ஒருவேளை புறப்பட்டிருக்குமோ என்று அச்சத்துடனே தான் சென்று கொண்டிருக்கிறோம். கோவில் வாசலை சென்றடைந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த இரு பேருந்துகளையும் பார்த்தவுடன் தான் அப்பாடி என்று படபடப்பு ஓய்ந்தது......வெளியில் இருந்தபடியே மகிமாலீஸ்வரரின் அருலைப் பெற்றுக் கொண்டு, பேருந்தில் சென்று ஏறிக்கொண்டோம். அங்கு காலியாக வெவ்வேறு இடத்தில் இருந்த இருக்கையில் இருவரும் சென்று அமர்ந்து கொண்டோம். அமர்ந்த சில நிமிடங்களில், கூடுதல் ஓட்டுநர் ஒருவர் வந்து ஏறினார். எங்களுக்காகவே இது நடந்திருக்குமோ என்று எண்ணி ஆண்டவனிடம்
மனதார நன்றி பாராட்டிவிட்டு, ஒருவழியாக செட்டில் ஆனோம். பேருந்து புறப்படவும், நிம்மதி பெருமூச்சு விட்டதுதான் தெரியும். இரவு முழுவதும் உறக்கம் இல்லாதலாலும், அயற்சி காரணமாகவும் ஏற்பட்ட அலுப்பினால் கண்ணை சுழற்றிய தூக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

வண்டியில் சலசலப்பு ஏற்பட்டு அதில் முழிப்பு தட்டியது. காலை பொழுது நன்கு புலர்ந்திருந்தது. புதுக்கோட்டை வந்து சேர்ந்திருந்தோம். அங்கு ஒரு சிறிய முருகர் கோவில் முன்பு நிறுத்தியிருந்தார்கள். காலை உணவிற்காக.பொதுவாக வெளியூர் பயணம் என்றாலே நாம் முதலில் கடைபிடிக்க வேண்டியது, குறைவான லக்கேஜீம், அளவான உணவும் தான். இது இரண்டையும் கடைப்பிடிக்க வில்லையென்றால், பயணம் இனிதாக இருப்பது சிரமம். எங்களுக்கு, காய்கறி கலந்த உப்புமாவும், தக்காளி கொத்சும் கொடுத்தார்கள்.பாக்கு மட்டை தட்டுகள், அவரவர் ஆளுக்கொரு தட்டு எடுத்து வந்து வாங்கிக் கொள்ள வேண்டும். நின்று கொண்டே வேகமாக சாப்பிட்டுவிட்டு,
கிளம்பினோம். சாப்பிட்ட இடத்தை அவரவரே சுத்தம் செய்து விட்டும் வர வேண்டும். பிறகு அங்கிருந்து கிளம்பி, மதியம் திருப்பெருந்துறை வந்து சேர்ந்தோம்.

முன்னை வினை இரண்டும் வேர
றுத்து முன்நின்றான்
பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன் - தென்னன்,
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்,
வரும் துயரம் தீர்க்கும் மருந்து.

திருவாசகம்.

இத்திருக்கோவில், சமயத் தத்துவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு எழுந்தவை. தத்துவ உண்மைகளை அறிந்து இன்புறச் செய்வன. கலைகளின் வளர்ச்சிக்குத் தாயகமாகவும், கலைக் களஞ்சியமாகவும், கற்பக பூந்தருக்களாகவும் காட்சி நல்குவன.


திருப்பெருந்துறை என்றும் ஆவுடையார் கோவில் என்றும் வழங்கப் பெரும் இத்திருத்தலம், எண்ணற்ற அருஞ்சிறப்புகள் பல அணி செய்யும் அருங்கலைக் கூடமாகவும், கலைப்பெட்டகமாகவும், காட்சியளித்து, திருவருள் நிறைந்து ஆராத இன்பம் அருளும் அருட்தலமாக[ போற்றி துதுக்கப்படுகிறது.


உருவமில்லாத அருவமாக அருட்காட்சி வழங்கும் ஆதமநாதப் பெருமான், அவ்வண்ணமே திருவருள் புரியும் அம்மை யோகாம்பிகை, அறிவாற் சிவமேயாகித் திருவுருவம் கொண்டு சிவமாக விளங்கும், மாணிக்கவாசகர், இவையாவும் வேறெங்கும் காணமுடியாத ஒன்றாகும்.ஆத்மநாதர் குருமூர்த்தியாக எழுந்தருளி வாதவூர்க்குச் சிவஞானோபதேசம் செய்தருளும் காட்சி வழங்கும் குருந்த மரக் கற்சிற்பம் கொண்ட பீடம் பெரும் சிறப்பு வாய்ந்ததாகும்.


“மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் தனியூர்”
“தனியூர் திருப்பெருந் துறையான பவித்ர மாணிக்கச் சதுர்வேத மங்கலம்” எனக் கல்வெட்டால் அறியப்படுவதாகிய இத்தலம் தென்கயிலாயம் என்று வழிபட்டு ஏத்தும் சிறப்பிற்குரியது.


திருப்பெருந்துறை ஒரு திவ்யத் திருத்தலம். இத்தலம் ஆவுடையார் கோவில் என்ற பெயரில் மயிலாடுதுறை - காரைக்குடி புகைவண்டிப்பாதையில் அறந்தாங்கிக்குத் தென் கிழக்கில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்டதாக அம்மாவட்டத்தின் தென் எல்லையில் இருக்கிறது. திருவாசகம், இத்தலத்தை சிவபுரம் என்று குறிக்கிறது.

திருப்பெருந்துறை ஆத்மநாதர் திருக்கோவில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே மூன்று பிரகாரங்கள் உள்ளன. இக்கோவிலில் கொடிமரமும் பலி பீடமும் நந்தியும் இல்லை.சண்டேசர் ஆலயமும் இல்லை.

இராஜ கோபுரம்:
இக்கோபுரம் ஏழு நிலைக் கோபுரமாக எழிலுடன் திகழ்கிறது. இக் கோபுர வாயிலின் நிலைக் கற்களிலும் சுவரிலும், கல்வெட்டுகள் உள்ளன.

தல விருட்சம் :
தியாகராஜ மண்டபத்திற்கு அப்பால் வடமேற்கு மூலையில் வெளி மதிலை ஒட்டினாற்போல அமைந்த திருமாளிகைப் பத்தியில் தல விருட்சமான குருந்த மரங்கள் இரண்டு உள்ளன. இப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மடைப்பள்ளி இருக்கிறது.



தொடரும்.