Saturday, October 5, 2013

தாயே! தவமே!


பவள சங்கரி




தாயே! தவமே! தத்துவஞான ஒளியே!
மாயே மதிவதனி வாருமம்மா
சேயே யானுனைத் தழுவிடவே
காமதேனுவாய் கற்பகத்தருவாய் வாருமம்மா!

கொல்லன் உலையெனக் கொதிக்குமென் மனமே
நில்லெனக் கருணைகூர்ந்து வரமொன்றருள்வாயே
கல்லென்ற இதயம்கொண்டு எனைக் காணாமல்
கொல்லெந்தன் பாவம்யாவும்  பரிபாலியே!

ஊற்றைச் சடலமிதை உய்யும் வழியறியா உயிரிதை
தையல்நல்லாள் தள்ளிநின்றே பார்ப்பதென்னே
பைம்பொழில் மாதரசே பரிதவிக்கும் ஏழையெனை
கடைக்கண்ணால் பார்த்தருளுமம்மா!

Thursday, October 3, 2013

வளம் தரும் நாயகியே! வருகவே!


பவள சங்கரி
Goddess_Adi_Parashakthi_at_Parashakthi_Temple
பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
நற்கதியருளி ஆனந்தமழை பொழியவே
பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!
நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா
அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா
ரஞ்சனியே தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!

Tuesday, October 1, 2013

அல்லியும் ஆதவனும்!



பவள சங்கரி





ஆதவனே அல்லியின் மொழியறிவான்
அறிவானவன் பிரம்மாக்களின் உய்கையை 
 உய்கையின் முடிவாக்கும் வேதமது கீதை
கீதையின் பாதையில் இனியதொரு கீதம்    

 கீதமதின்  வேதம் வீணையறியும் மாயம்
 மாயமும் இதமாய் ஏற்படுத்தும் காயம்
காயமிது காற்றடைத்த பையாயினும்
பையினுள் நிறைந்திருக்கும் பரிவெனும் மெய்

 மெய்கண்டால்  உளத்தில் சித்திக்கும் தவம்
தவம் கசடற கருத்தினை வழங்கும் கற்பகமாய்
கற்பகமும் மாசில்லா மனமருளும் மரகதமாய
மரகதமணியும் மலர்செண்டும் மதமறியாது  

மதமும் பதமாய் கட்டுக்குள்போகும் மந்திரமாய்
மந்திரமும் தந்திரமும் மறைந்து மலருமங்கு மனிதம்
மனிதம் மகோன்னதத்தின் மாசற்ற சோதி
சோதிப்பிழம்பாய் சுட்டும்விழியாய் சுடரொளியாய் ஆதவன்!


படத்திற்கு நன்றி:
http://elenau-elena.blogspot.in/

                                                                                 

Sunday, September 29, 2013

காற்று


பவள சங்கரி



இலக்கற்ற பயணமாக இருந்தாலும் இசைப்புள்ளின்
இயக்கத்தை நிறுத்தாத இளம் தென்றல்தான்.

மலையினூடே, மரத்தினூடே  செடிகொடியினூடேயென
பாரபட்சமற்ற  பக்குவமான பயணம்தான்.

பலநேரம் பரபரப்பாய் பறந்து திரிந்தாலும்
அரக்கனாய் அடித்துத் தின்னும் சுனாமியல்ல

தலையசைத்து நடனமாடி சலசலத்து கீதமிசைத்தாலும்
குருவிவாழும் கூட்டிற்குள் குரோதமாய் நுழையாத குருத்து

உருவமுமில்லை  வேலிதாண்டி நுழையும் வஞ்சமுமில்லை
உதிரம் சொரியும் வலியையும் உறைந்து நீக்கும் உத்திரவாதம்!

மலர்வனத்தில் மணம் பரப்பும்  கீதம் சுமந்து  சிம்மாசனமிடும்
வேதாந்தி விவேகானந்தனையும் வருடிய வரம் பெற்ற  வளி!

படத்திற்கு நன்றி :

http://www.google.co.in/imgres?imgurl=http://www.all-wallpapers.net/wp-content/uploads/2012/11/Light-Breeze.jpg&imgrefurl=http://www.all-wallpapers.net/wallpaper/light-breeze/&h=1200&w=1920&sz=134&tbnid=sEVOb8VwsrKI6M:&tbnh=90&tbnw=144&zoom=1&usg=__0JquZz_ICQlkD0ArdLll65bGT7Y=&docid=6I7A79UqfbWB_M&sa=X&ei=1wFJUruoJYrqrQfQnYCoDw&ved=0CFwQ9QEwBA