Friday, March 7, 2014

சுவடுகள் பதித்த சுடரொளிகள்!


பவள சங்கரி

தலையங்கம்

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி  அனைவருக்கும், பேச்சுரிமை, தனி மனித சுதந்திரம், பாதுகாப்பான வாழ்க்கை என அனைத்தும் அனைவரும் பெறும்  உரிமை உள்ளது. ஆனால் இவையனைத்திற்குமாக நாம் நிர்ணயிக்கும் அளவுகோல் மட்டுமே நம் இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கிறது.

பண்டைக்கால மகளிரின் ஒழுக்க நெறியினை நம் வேதங்கள் அழகாக எடுத்துரைக்கின்றன. வேத காலத்தில்  ஒரு ஆண் மட்டுமே குடும்பத் தலைவனாக இருந்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஆண் மகவு பிறப்பதையே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடியதோடு, அதற்கான பிரார்த்தனைகளையும் மேற்கொண்டனர். வேத காலத்தில் கல்வி என்று எடுத்துக்கொண்டால் பெண்களைப் பொறுத்த வரையில் ஆணுக்கு நிகரான கல்வி வழங்கப்படவில்லை. ஆனாலும் சமூக வாழ்க்கையில் ஆண், பெண் என இரு பாலரும் சம நிலையிலேயே இருந்திருக்கின்றனர். அதாவது ஆண்களைப் போன்றே பெண்களும் அனைத்து விதமான சுதந்திரமும் பெற்றிருக்கின்றனர். மெல்ல மெல்ல அவளே தெய்வ நிலைக்கும் உயர்த்தப்பட்டிருக்கிறாள்.  ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அந்தக் காலத்தில் பெண்களின் திருமண வாழ்க்கையில் கட்டுப்பாடும், ஒழுக்க நெறியும் கடைபிடிக்கப்பட்டு வந்ததோடு, விவாகரத்து என்ற ஒரு கோட்பாடே இல்லாமலிருந்திருக்கிறது. 

Monday, March 3, 2014

பாரதியின் , THE FOX WITH THE GOLDEN TAIL சிறுகதை! (தொடர்ச்சி - 3)


பவள சங்கரி


”பொன் வால் நரி”யில் இந்தக் காலகட்டத்தில் மிகப் பிரும்மாண்டமான ஆன்மீக மோசடி என மிகச் சரியாகவே கணிக்கப்பட்ட ஒன்றை” என பாரதி குறிப்பிட்டிருப்பது ஜே. கிருஷ்ணமூர்த்தியை உலக குருவாக ஆக்குவதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் குறிப்பதாகும். இந்த நடவடிக்கைகள் முற்கூறப்பட்ட ‘மஹாத்மாக்களின்’ வழிகாட்டுதலின் பேரிலேயே நிகழ்ந்தன. இந்து பத்திரிக்கையில் 1911 ஜனவரி 24-ல் டாக்டர் நஞ்சுண்டராவ் இந்த ‘மகாத்மாக்கள்’ பற்றிய பெசண்டின் பிரசாரத்தை வன்மையாக மறுத்து எழுதிய கடிதம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ஆதரவாகவும், எதிராகவும் பல மாதங்கள் ‘இந்து’வில் கடிதப்போர் நிகழ்ந்தது. 

‘பொன் வால் நரி’யின் உள்ளடக்கத்தோடு மிக நெருங்கியத் தொடர்புகொண்டது, தியாசபி மகாத்மாக்கள் பற்றிய விமர்சனமாகும். 

குதுமி, மோர்யா எனும் ‘மகாத்மாக்களைப்’ பற்றிய விவரங்கள் சார்லஸ் வெப்ஸ்டர் லெட்பீட்டரின், 'Tha masters and the paul' எனும் நூலில் உள்ளன. 

குதுமி, மோர்யா வீடுகள் திபேத்தில் ஒருமலைக் கண்வாயில் எதிரெதிரே உள்ளனவாம். இவர்களது தோற்றங்கள் லெட்பீட்டர் நூலில் பின்வருமாறு வருணிக்கப்பட்டுள்ளன.