Thursday, December 31, 2015

இனிய புத்தாண்டே மலர்க!


பவள சங்கரி


புத்தாண்டு மலர்ந்தது!
வைகறை மலர்ந்த இன்பொழுதில்
கவினுறு காட்சிகளின் அணிவகுப்பு!
 மின்னும் நட்சத்திரம், மிதக்கும் மேகம்
குளிர்தென்றல், கொஞ்சும் புறாக்கள்,
எங்கும்  மனம்நிறை பேரமைதி, 
ஆழுலகொன்றின் முகட்டில் உறைதருணம்
 உளமறியாதொரு கணப் பொழுதில் 
 பசுமைக்களஞ்சியமாய் முளைத்தெழுந்த அன்பில்
கோட்டுப்பூவாம் கொன்றையிலுறையும்  கோபதியாய்
மறைகண்ட மங்கல மயோரனவன்
கறைக்கண்டன் கற்பகத்தருவானவன்
முயற்புல்லிற் பனித்துளியானவன்
மிறல்நகை கயற்கண்ணியின் சிற்றம்பலவன் 
சிறிபலம் நாடும் சுடலையாடியவன்
பற்பதமதில் பற்றாயர் கோலம்கொண்டவனவன்
பற்றாயமாய் சுபங்கரியின் மனத்திலுறைபவனவன்
சுப்பிரதீபம் நாடுவானவன்  தினம்! தினம்!
மலர்ந்த 2016  ஜெயம்! ஜெயம்!

புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே!



Monday, December 28, 2015

கிருஷ்ண.. கிருஷ்ணா .......

பவள சங்கரி


கிருஷ்ணா உனக்கொரு கரும்பு!

மிகச் சிறந்த கிருஷ்ண பக்தர் அவர். எந்நேரமும் ‘பாண்டுரங்கா - விட்டலா’ என்ற நாமம் மட்டுமே அவருடைய உயிர் மூச்சு. அந்த மகானிடம் ஒரு நாள் ஒரு மனிதர் ஒரு கட்டு கரும்பைக் கொடுத்து தம் அன்பைச் செலுத்தினார். அந்த கிருஷ்ண பக்தரோ தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களையெல்லாம் அழைத்து, ‘கிருஷ்ணா இந்தா உனக்கொரு கரும்பு’ என்று அனைத்துக் குழந்தைகளையும் கிருஷ்ண பரமாத்வாகவேக் கண்டின்புற்று அனைத்து கரும்புகளையும் கொடுத்துவிட்டாராம். இறுதியில் ஒரு கரும்பு மட்டும் மீதமிருக்கிறது. அதை தமது சரிபாதி அங்கமான மனைவியிடம் கொண்டு சென்றுக்கொடுத்தாராம். அந்த அம்மையாரும் அதைப் பிடுங்கி அவர் தலையிலேயே ஓங்கி அடித்தாராம். கரும்பு இரண்டாகப் பிளந்துவிட்டதாம். உடனே அந்த மகான் அதையெடுத்து மீண்டும் தம் மனைவியிடம் ‘கிருஷ்ணா இந்தா உனக்கொரு துண்டு, எனக்கொரு துண்டு’ என்றாராம். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மனிதர்,

“ஐயா, உங்கள் தலையில் ஓங்கி அடித்த அம்மையாரிடமும் எப்படி உங்களால் இத்தனை அன்பு செலுத்த முடிகிறது? கோபமே வரவில்லையா தங்களுக்கு?” என்று ஆச்சரியமாக வினவினாராம். அதற்கு அந்த மகான்,

“ஐயனே, நான் அவர்மீது கோபப்பட என்ன இருக்கிறது. என்னை பக்குவப்படுத்திய நல்லதொரு ஆன்மா அல்லவா அவர்! நான் நன்றியல்லவா செலுத்தவேண்டும்” என்றாராம்.

இதுவல்லவோ ஆன்மீகம் என்பது. ஆனால் இன்று காண்பதெல்லாம் இதற்கு மாறாகவல்லவா இருக்கிறது. நன்மையும் தீமையும் பிறர்தர வாரா. அவரவர் வினைவழி அவரவர் வாழ்க்கை. ஆன்மீகம், நாட்டுப்பற்று என அனைத்தும் விலை பேசப்படுவதே விதியாக உள்ளது. நேர் வழியில் சேவை செய்ய விரும்புபவர்களும் குறுக்கு வழியிலேயே நுழைய வேண்டிய நிலையே இன்று நாட்டின் தலையெழுத்தை நிர்மாணிக்கிறது என்று எண்ணும்போது நம் எதிர்காலத்தை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை.

Sunday, December 20, 2015

கண்ணீர் - 눈물/김현승 - கொரிய மொழிபெயர்ப்பு

பவள சங்கரி


Tears by Kim Hyun-seung

Often
I wish to be a small seed
falling to the fertile ground.

These are all I have–
flawless, spotless,
unbroken!

When I am asked to offer
what is most precious,
these are the only ones I have left!

You saw the flowers of a beautiful tree withering
and made it bear fruit,

and, after giving me laughter,
you have renewed my tears.

Friday, December 18, 2015

இலையுதிர்கால நாளொன்றில் …… ! - 가을날/ 이시영 - கொரிய மொழிபெயர்ப்பு


பவள சங்கரி

கொரிய மொழிபெயர்ப்புக் கவிதை

An Autumn Day by Lee Si-young
Photography by Lee Won-kyu
PHOTOGRAPHY BY LEE WON-KYU

A dragonfly sat on the end of a persimmon branch
and dozed off all day.
Even with wind, it did not shake;
even with a cold rain smacking the branch,
it did not move over.
When I quietly approached it,
I was startled to see,
right there, it had arrived in Nirvana.

இலையுதிர்கால நாளொன்றில் …… !
சீமைப் பனிச்சைக் கனி
சீமைப் பனிச்சைக் கனி
சீமைப் பனிச்சை மரக்கிளையின் நுனியிலொரு தும்பி
பொழுதெல்லாம் மதிமயங்கிக்கிடந்தது.
வளியின் வீச்சிலும் அசைவில்லை அதனிடம்;
கிளையை உலுக்கியெடுக்கும் குளிர் மழைக்கும்
அசைந்து கொடுக்கவில்லையது.
மெல்ல அதனருகே நெருங்கிய தருணமதில்,
அதிர்ந்து போனேன் அதன் நிலைகண்டு,
ஆம், அங்கேயே அது பேரானந்த நிலையை எய்தியிருந்தது.


가을날/ 이시영
잠자리 한 마리가 감나무 가지 끝에 앉아
종일을 졸고 있다
바람이 불어도 흔들리지 않고
차가운 소나기가 가지를 후려쳐도
옮겨앉지 않는다
가만히 다가가보니
거기 그대로 그만 아슬히 입적하시었다
படங்களுக்கு நன்றி
https://ta.wikipedia.org/wiki/






http://www.vallamai.com/?p=64799

Wednesday, November 25, 2015

விசுவரூபம்!

பவள சங்கரி






நல்லதாக ஒன்று வாங்க வேண்டும்
ஏன் இருப்பதற்கு என்னவாம்?
வண்ணம் பலவாய் இருந்தாலும்
திண்ணம் சமமாய் இருந்தாலும்
வடிவம் வேறான தோற்றம் 
அத்தனையும்  அசலில்லா நகல்கள்!

சற்றேனும் எதனுடனோ பொருந்தியிருக்கலாம்
எல்லாமே போகமும் மோகமும் தேடுவன
தங்கக்கூண்டில் அடைக்கத் துடிப்பன
முளைக்கத் துடிக்கும் சிறகை 
கிளைக்காமல் தடுக்கும் வளிவீச்சு
துள்ளலை எள்ளலாய் முடக்குவன
விள்ளலாய் வாழ்ச்சியை துய்ப்பன!

பொன்னில் மஞ்சளும் வெண்மையும்
வேறானாலும் திடமும் களமும் வேறல்ல
மஞ்சள்பொன் தொன்மையென்றால்
வெள்ளைப்பொன் நவீனம்தான்
மஞ்சளோ வெள்ளையோ எதானாலென்ன
முடங்கியதும் முடக்குவதும் தரத்தினாலே


விசுவரூபம் காட்டுமந்த ஒன்று வேண்டும்
விகாரமனம் வெளிப்படும் அதுவும் வேண்டும்
விடையில்லா வினாக்களை விடுவிக்கவும் வேண்டும்
விட்டிலாய் வீழாமல் காக்கவும் வேண்டும்.

பகடைகளாய் உருட்டுவோர் பதம்காட்ட வேண்டும்
பத்மவியூகம் அமைப்போர் நிறமும்காட்ட வேண்டும்
பழவினைகள் போக்குவோர் திறமும்காண வேண்டும்
பசப்புகள் பற்றாகாமல் விலகவும் வேண்டும்.

மாறுவேடங்கள் மாறாத மந்திரச் சொற்கள்
கூறுமடியார்போல் கூரான தந்திரச் சாடல்கள்
வீறுகொண்டெழும் வீணரின் விவகார நிந்தனைகள்
சேறுவீசும் சிற்றறிவின் சிலுமிசங்கள்
அனைத்தும் அசலான நகலுக்கு
அறச்சீற்றம் கொள்வதன்றி வடிகாலேதுமில்லையே?






Monday, November 23, 2015

எல்லாமே கணக்குதாங்க ...... !




கி.மு. 569ல் கிரேக்கத்தின் சமோஸ் தீவில் பிறந்தவர் பித்தகோரசு (Pythagoras of Samos). நரம்பிசைக் கருவியான மகர யாழ் இசைப்பதில் வல்லவரான இவர் இசைஞர் மட்டுமல்ல கவிஞரும்கூட. கணிதம், தத்துவஇயல், வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கி.மு. 535 ம் ஆண்டு வாக்கில் சாமோஸ் தீவிலிருந்து எகிப்து சென்ற பித்தகோரசு, அங்கு ஆயகலைகளைக் கற்றார்.
2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பித்தகோரசின் நம்பிக்கைகள் மற்றும் உயரிய தத்துவங்கள் இன்றளவிலும் நம் வாழ்க்கைக்கு இயல்புடையதாகவே இருப்பது ஆச்சரியம்தான் இல்லையா…

Monday, November 16, 2015

மௌனம் உறைந்த மனம் (வரலாறு அல்ல.. கற்பனைக் கதை)


பவள சங்கரி


மனத் தெளிவு மட்டுமே ஒரு சாமான்ய மனிதனை புத்தனாக்குகிறது. ஒரு புத்த பிக்குனி கதை கேளுங்கள்.

இயற்கை வளமும், இறை நலமும் ஒருங்கே உறையும் உன்னத மலை அது. அமைதி.. அமைதி.. எங்கும் பேரமைதி.. அமைதியின் அழகில் இறைமையின் வடிவாக வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலை. தெளிந்த நீரோடையின் இதமான குளிர் தென்றல் சுகமாக அணைத்திருக்க, பதமான பல்சுவையமுதாய் புள்ளினங்களின் மெல்லிய கீதங்கள். இரைச்சலற்ற இனிய நாதங்கள். இவையெல்லாம் மகுடமாய் அலங்கரிக்க மகாராணியாய் வீற்றிருக்கிறாள் அம்பிகைதேவி, பூத்துக்குலுங்கி மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பசுமை வேம்பின் தண்ணிழலில் தனி இராச்சியம் அமைத்தபடி ஆனந்த தியானத்தில் அமைந்திருந்தாள். எண்ணமெல்லாம் இசைக்களிப்பு! சுவாசமெல்லாம் கானத்தின் சிலிர்ப்பு! நேசமெல்லாம் இராகாலாபனையின் உயிர்ப்பு! உண்டியும், உறக்கமும் கூட மறந்த மோன நிலை! இசையே உணவாய், உணர்வாய் உயிர் மூச்சாய் உறைந்திருக்கும் உன்னத நிலை! இதுதான் அம்பிகைதேவியின் இறை நிலை. அவளின் அன்றாட வாடிக்கை. எத்தனைக் காலமாய் இப்படி கிடக்கிறாளோ, அறிந்தவர் எவரும் இலர். பலர் கண்களுக்கு கந்திற்பாவையாகத் தெரிபவள், சிலர் பார்வையில் மட்டும் உயிருள்ள ஓவியமாய், உன்னதக் காவியமாய் காட்சியளிப்பவள். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று காலம் ஓடிக்கொண்டிருந்தது. இளவரசன் இமயவர்மன் சிறந்த பௌத்த நெறியாளர். கருணையே வடிவாக, கடமையே உறவாக, மக்கள் நலமே பெரிதாக நினைத்து வாழ்பவன். அவனுடைய அன்றாடப் பணிகளுள் முக்கியமான ஒன்று அம்பிகைதேவி தரிசனம். பெரும்பாலும் கந்திற்பாவை காட்சியே காணக்கிடைத்தாலும் பலமுறை கனவிலும், சிலமுறை அரை நினைவிலும் அம்பிகைதேவியின் உருவைக் கண்டவன். அந்த தீப ஒளியில் கண்கள் கூசிட உள்ளம் மட்டும் பட்டொளியாய் பளிச்சென்று மின்ன, சிறிது சிறிதாக ஞானம் பெற்றவாறு புத்தம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தவன். புரியாத புதிர் ஒன்று கந்திற்பாவையிடம் இருந்ததையும் கண்டவன், என்றேனும் ஓர்நாள் அம்பிகைதேவி தனக்கு விடை பகர்வாள் என்று ஞானம் பெறக் காத்திருந்தான். தேடல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. கந்திற்பாவையின் கழுத்தைச் சுற்றிய யாழிசைக் கருவியின் உறுதியான நரம்புகள் நீண்டு நெளிந்து, சில நேரங்களில் இறுக்கியவண்ணம் இருந்தது. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வண்ணம் காட்டி காண்போரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்த அந்த மென்நரம்புகள் இடையூறாய் இருப்பதாக நினைத்து போகவர விலக்க நினைக்க, இமயவர்மனைத் தீண்ட விட்டால்தானே.. இறுக்கிய இசை நரம்பிற்கு இதயமில்லையோ என்றுகூட கருவினான் அவன். கேள்வி கேட்பாரும் இல்லாமல் பதிலளிக்கவும் முனையாமல் அசையா சடமாக கந்திற்பாவை … பரபரத்து துடித்த கையை , மடக்குவதைக் காட்டிலும் வேறேதும் செய்ய இயலா நிலை இமயவர்மனுக்கு. விடிவு காலம் வர வினையாவும் தீரும் என்று காத்திருந்தான் அவன்.

தமிழ் மொழியின் சொல்வளம்!

பவள சங்கரி


ஒரு பொருளின் தன்மைக்கேற்ப அப்பொருளின் பெயரைக் குறிக்க பல சொற்கள் பயன்படுத்துவது நம் மொழியின் தனிச்சிறப்பு. இது வேறு எந்த மொழியிலும் காணமுடியுமா என்பது ஐயமே… உதாரணமாக,
இலை என்று எடுத்துக்கொண்டோமானால் அதற்கு எத்தனை வகைப் பெயர்கள் பாருங்கள்…
நெற்பயிர் இலைகள் – தாள்
கருப்பஞ்செடி இலைகள் – தோகை
தென்னை, பனை மர இலைகள் – ஓலை
தாழை இலைகள் – மடல்
காய்ந்த இலை – சருகு
சில வகை இலைகளை – தழை என்கிறோம்..

வெண்பனி மனிதன் (கொரிய மொழிபெயர்ப்பு கவிதை)


பவள சங்கரி

சதாசர்வமும் பஞ்சுப்பொதியாய்
பனித்திவலைகள் பெறுவதினிது.
செல்லக்குட்டி நாய்போல்,
மீண்டும் நானொரு சிசுவாய் ஆவதினிது.
கூதாளிக்கால நெட்டை மரங்களினூடே
நோக்கமேதுமின்றி கடப்பதுவே
அற்புதமாம்.
அஃதேபோல் வெண்மை பாதச்சுவடுகளாய்
தனித்திருப்பதும் அற்புதமே.

எம்மை வாழ்த்தும்பொருட்டு
கூதாளியின் விளிம்பில் நிற்கும்
விருப்பமான ஒருவருடனே - எல்லோரும் விரும்பும் அந்த ஒருவருடனே-
இருப்பதும் இனிமையே.
ஒருவரையொருவர் மெலிந்த முதுகுகளை தட்டிக்கொடுத்தவாறு
உளமார்ந்து நகைப்பதும்
உன்னதமே.
இப்பஞ்சுப்பொதி பனித்திவலைகள்போல்
உள்ளார்ந்து நகைத்தலும்
உன்னதம்.
அற்புதம் -
வேதனையின் உச்சத்தில் நொந்ததோர்முறை
சோகத்தின் உச்சத்தில் நொந்ததோர்முறை
ஏழ்மையின் உச்சத்தில் நொந்ததோர்முறை
அதுவும்கூட அற்புதமே.
இவையனைத்தையும் வெண்மையாக்கும்
முடிவில்லாமல் முகிழும் பஞ்சுப்பொதி பனித்திவலைகள்
அற்புதமே.
அதீத
அறிவீனம்தான்,
ஆயினுமோர் வெண்பனி மனிதனாவதில்தான் எத்துனை ஆனந்தம்!

Saturday, October 31, 2015

அழுகுணிச் சித்தரும், கவியரசரும்!



வேதாந்தம், வைத்தியம், யோகம், ஞானம் முதலான பல நிலைகளில் பாடியுள்ளவர் அழுகண் சித்தர். அழுகண் சித்தர் பாடல் 200, ஞான சூத்திரம் 23 ஆகிய இரண்டு நூல்கள் படைத்தவர்.  அழுகணிச் சித்தர் என்றும் அழுகுணிச் சித்தர் என்றும் வழங்கப் பெற்றவர்.

    இந்தச் சித்தர்தான்  ஊரைப் பார்த்து , உலகையும் பார்த்து , தன்னையேப் பார்த்தும்  இப்படி அழுதாராம்.

     பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து   
   மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்  
    மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்   
   பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா.          
    - பாழாய் முடியாதோ.


நம்ம கவியரசர் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறதா ?



 திரைப்படம்: காட்டு ரோஜா
 பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
 இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
 இசை: கே.வி. மகாதேவன்
ஆண்டு: 1963


எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! 
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்!

வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

https://youtu.be/D22gJStL37I

Monday, October 26, 2015

ஆப்பிளும் கலீல் கிப்ரானும்!



ஆப்பிள் ஒன்றை  அசைபோடும் உமது பற்கள்  உம்மிதயத்தில்  இதையும் சேர்த்தே அசை போடட்டுமே:

உமது விதைகள் எமது உடற்கூட்டில் உறையட்டுமே,
உமது நாளைய மொட்டுக்கள் எமது இதயக்கூட்டில்  மலரட்டுமே,
ஓ, உமது மணமே எமது சுவாசமாகட்டுமே,
ஆம், நாமிருவரும் ஈருடல் ஓருயிராகக் கொண்டாடி மகிழ்வோமே காலந்தோறும்!

கலீல் கிப்ரான்


“And when you crush an apple with your teeth, say to it in your heart:
Your seeds shall live in my body,
And the buds of your tomorrow shall blossom in my heart,
And your fragrance shall be my breath,
And together we shall rejoice through all the seasons.” 
― Kahlil Gibran

Friday, October 23, 2015

வாழ்க இந்தியா!

பவள சங்கரி


'மூடீஸ்’ (Moodys) என்பது ஒரு அகில உலக பொருளாதார ஆய்வு நிறுவனம்.  இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி  வெளிநாடுகளின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் பாதிப்பு இன்றி இந்தியா தன்னுடைய சுய பொருளாதார முன்னேற்றம் மூலமாக, 2015 - 2016 ம் ஆண்டில்,   ஜி 20 நாடுகளின் முதன்மையாக  7.75 சதவிகித பொருளாதார வளர்சியை அடையும் என்று அறிவித்துள்ளது. இதற்கு இந்தியாவின் சுய பொருளாதார முன்னேற்றமே காரணம் என்கிறது இந்த ஆய்வறிக்கை.  துருக்கி, இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைவிட இந்தியா பல வகையில் வளர்ச்சி எல்லையை அடையப் போவதும் உறுதி  என்கிறது இந்த ஆய்வறிக்கை.  மேலும் நம் இந்திய அரசின்  உறுதியான பொருளாதாரக் கொள்கைகளின்  பலனாக பண வீக்கம் முற்றிலும் கட்டுக்குள் வரும் என்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறது இந்த நிறுவனம். அமெரிக்காவின் பொருளாதார நிலையும், சீனாவின் பொருளாதார வீழ்ச்சியும் கூட நம்  இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது என்பதும் மிகவும்  மகிழ்ச்சியான செய்தி.. 

நன்றி : வல்லமை

Friday, October 16, 2015

மனிதரில் மாணிக்கம் - கலாம்




ஒல்லும் வகையான், அறவினை, ஓவாதே,
செல்லும்வாய் எல்லாம் செயல்.

உரை: செய்யக்கூடிய வகையால், எக்காரணம்கொண்டும் தவிர்க்காமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலையே செய்ய வேண்டும். 

Tuesday, October 13, 2015

நாலடியார் - பொறையுடைமை




அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.


அறிய வேண்டிய நன்மை தீமைகளனைத்தும் அறிந்து, தன்னடக்கமுடையவராக, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அச்சம்கொண்டு, தாம் செய்யும் காரியங்களை உலகம் உவக்குமாறு செய்து, நேர்மையான வழியில் சம்பாதிக்கும் பொருள்கொண்டு இன்பாக வாழும் இயல்புடையவர்கள் எக்காலத்தும் துன்புற்று வாழ வேண்டியிருக்காது.

இன்பம் பயந்தாங் கிழிவு தலவைரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட !
பழியாகா ஆறே தலை.

உயர்ந்தோங்கிய மலையிலிருந்து வீழும் அருவிகளைக் கொண்ட நாட்டை உடையோனே! இழிவே வந்தாலும் வரட்டும் என்று இன்பம் கிடைக்கின்றதே என்பதால், அச்செயலின் பக்கம் இருப்பவனுக்கு இன்பம் தொடர்ந்து கிடைக்கும் என்றாலும், உலகம் பழிக்காமல் இருக்க வழியில்லை என்ற நிலையில் அச்செயலை செய்யாமல் இருப்பதே நன்மை பயக்கும். அதாவது, இடையறாத இன்பம் உண்டாவதாயினும் பழிப்பில்லாத நற்செயல்களே செய்யத்தக்கது.

இணையப் படத்திற்கு நன்றி

புறநானூறு 106



பாடியவர்: கபிலர் 
பாடப்பட்டோன்: வேள் பாரி, 
திணை: பாடாண், துறை: இயன் மொழி


நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையவை
கடவுள் பேணே மென்னா வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே.


உரை : சூடும் மலரில் நல்லது, தீயது என்பதெல்லாம் நம்மைப்போல் இறைவனுக்கு இல்லை. அதாவது எவரும் விரும்பாத, குவிந்த மலர்களும், புல்லிய இலைகளையும் கொண்ட எருக்கம் பூவேயானாலும் அதனை உள்ளன்போடு அணிவித்தால் கடவுள் வேண்டாம் என்று மறுக்காமல் ஏற்பார் ! அதைப்போன்று ஏதுமறியா அறிவிலர், புல்லிய குணமுள்ளவர், வறுமையுற்றார் என எவர் வரினும் பாரி வாரி வழங்குவான்!

Sunday, September 27, 2015

தூரனின் மதிநுட்பம்!





மென்மையாகவும், நுட்பமாகவும் பேசும் திறன் பெ. தூரனுக்கு இளமையிலேயே வாய்த்திருந்தது. மாணவப் பருவத்தில் ‘பித்தன்’ என்ற இதழை நண்பர்களுடன் நடத்தி வந்தார் தூரன். இது திரு.வி.க.வின் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இதழைப் பதிவு செய்ய திரு.வி.க. வும், தூரனும் தலைமை குற்றவியல் நடுவர் அவர்களிடம் சென்றனர். அவர் ஆங்கிலேயர். இந்த இதழோ தேசப்பற்று மிக்க இளைஞர்களால் ‘பித்தன்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. குற்றவியல் நடுவர், 'What do you mean by Pithan?' என்று தூரனைக் கேட்டார். திரு.வி.க. அவர்கள், இந்த இளைஞன் என்னதான் பதில் சொல்லப் போகிறானோ என்று சிந்தனை வயப்பட்டார். ஆனால் தூரனோ சற்றும் அசராமல், துளியும் கலவரமின்றி, 'It is one of the names of God Shiva'என்று பதிலளித்தார். இதழ் பதிவு பெற அனுமதி கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமோ? மாணவர் தூரனின் அறிவார்ந்த பதிலால் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த திரு.வி.க. தூரனின் மதி நுட்பத்தைக் கண்டு உளமார பாராட்டினாராம்!

இசையுலகின் முடிசூடா ராணி கே.பி.எஸ்.

பவள சங்கரி

இசை உலகின் முடி சூடா ராணியாகத் திகழ்ந்த கே.பி.எஸ் அவர்களின் மனதை மயக்கும் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.அழுத்தமான அந்த உச்சரிப்பும் குரலின் நீரோடை போன்ற தெளிவும் இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை.இசையில் மட்டுமல்லாமல் தனது தனித்துவமான திறமைகளால் நாடகம் ,அரசியல், ஆன்மிகம் என்று பல்வேறு துறைகளிலும் சிறப்புற்று விளங்கியவர் அவர். சினிமாவில் முதன்முறையாக அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று சாதனை படைத்தவர் அவர். மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்ட அவர்தான் கேபிஎஸ் என்றால் அதற்கு அவருடைய மனிதாபிமானமும் ஒரு முக்கிய காரணம்.. இயற்கையாக அவரிடம் அமைந்திருந்த அந்த குணம். எங்கள் கொங்கு நாட்டு இசையரசி மங்கையர் குல திலகம் என்றால் அது மிகையாகாது... இசை தந்த கொடை கே.பி சுந்தராம்பாள் .
வீடு வாசல் மறந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் தீரர் சத்தியமூர்த்தி. வருமானம் என்பதே இல்லாமல் இருந்த காலம்.. அப்போது தன் அரசியல் குருவான சத்தியமூர்த்தி அவர்களின் குடும்ப நிலையைக் கருத்தில்கொண்டு நம் இசையரசியார் தாம் வாங்கியிருந்த நிலத்தில் நான்கு கிரவுண்ட் நிலத்தை சத்தியமூர்த்தி அவர்களுக்கு இலவசமாக எழுதிக் கொடுத்தாராம். அந்த நிலத்தில் வீடு கட்டிய சத்தியமூர்த்தி சுந்தராம்பாள் அவர்களை தங்கள் சந்ததியாரும் நினைவுகூரும் வகையில் தமது வீட்டில் ‘சுந்தரம்’ என்று கல்வெட்டுப் பதித்தாராம். அந்த வீடு இன்றும் சென்னை தணிகாசலம் தெருவில் (தி.நகர்) உள்ளது. இதெல்லாம் அரசியல் கடந்த மனிதம் அல்லவா...?

Wednesday, September 23, 2015

புறநானூறு (385)


பவள சங்கரி
image
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப,
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி,
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை,
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி,

Friday, September 18, 2015

குற்றமும் தண்டனையும்! (புறநானூறு)


பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார். 
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி. 
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.
purananooru
வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!

Wednesday, September 16, 2015

என்றும் இன்சொல் பேசுவோம்!


பவள சங்கரி

ஒரு பிடியும் எழு களிரும்!

புறநானூறு
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை :பாடாண். துறை : செவியறிவுறூஉ.
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

Tuesday, September 15, 2015

உருவமில்லாதது!


பவள சங்கரி




அதில்லாமல் இதுவும் இல்லை
அதிருந்தாலும் இதிலேதுமில்லை
அதுவும் இதுவுமிருந்தாலும்
எதுவும் இல்லாதிருந்தாலும்
எல்லாமே எப்போதும் இருக்கும்
கொடுக்கலும் வாங்கலும் இருந்தாலே
இதுவும் அதுவும் உயிரோடிருக்கும்
உருவமில்லாததற்கு மதிப்புமில்லை
உறைந்திருக்க உத்திரவாதமுமில்லை
உறுத்தலில் திருத்தமும் சாத்தியமில்லை
நிறைத்தலில் நீட்சியும் தேவையில்லை
மறைத்தலில் மாட்சிமையும் 
மாண்பும் இல்லவே இல்லை!

Thursday, August 27, 2015

சுட்டும் விழிச்சுடர்!



பவள சங்கரி
545543_362907083797923_2088759971_n

நெஞ்சுரமும், நேர்மைத் திறமும்!

Take-My-Hands-Image2
வாழ்க்கையில் ஒருவருக்கு எந்த நேரமும் துன்பங்களும், துயரங்களும், அபாயங்களும் நேரலாம். இதில் ஆண் என்ன பெண் என்ன… இதற்கெல்லாம் நாம் எப்போதும் தயாராக இருக்க முடியாது என்றாலும், நம் குழந்தைகளுக்கு இளம் வயது முதலே அதற்கான துணிவையும், மன உறுதியையும் ஊட்டி வளர்க்க வேண்டியது ஒரு பெற்றோரின் கடமையாகிறது. எங்கு பார்த்தாலும், வன்முறைகள் கொடி பிடித்து ஆட்டம் காட்டும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற தெளிவை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது! ஆனாலும் ஒரு பெண் என்றால் இரும்பைப் போன்ற நெஞ்சுரமும், எதையும் தாங்கும் இதயமும், கடுமையான உழைப்பும், அன்பான குணமும், விடாமுயற்சியும் சற்று அதிகமாகவே இருப்பது இயல்பு. அதற்கான தேவையும், சமயமும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும்போது அதை அவள் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. இதற்கான அருமையான ஒரு உதாரணம்தான் மாரிசெல் அபாதன் என்ற இந்தப் பெண். அவளுடைய கதையைக் கேட்டால் நமக்குள்ளும் ஒரு உத்வேகம் பிறப்பது நிச்சயம்! வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தம் இரண்டு கைகளும், பத்து விரல்களுமே மூலதனம் என்பார்கள். ஆனால் இச்சிறு தேவதைக்கு இரண்டு கரங்களும், அந்தப் பத்து விரல்களும் கூட இல்லை! ஆனாலும் உறுதியை இழக்கவில்லை அவள். மருத்துவர்கள் பொதுவாகச் சொல்கிற ஒரு விசயம், மருந்து மற்றும் மருத்துவத்தின் பங்கு 50 சதவிகிதம் என்றால் ஒரு நோயாளியின்  நம்பிக்கையும், பிழைக்க வேண்டும் என்ற மன உறுதியும், மீதம் 50 சதவிகிதம் இருந்தால்தான் அவர் பிழைக்க முடியும் என்பார்கள். அதற்கும் ஒரு எடுத்துக்காட்டு இச்சிறுமி.

Monday, August 17, 2015

முச்சல்லடை சோதனை ? நட்பின் இலக்கணமா?

பவள சங்கரி



கிரேக்க நாட்டு பேரறிஞர் சாக்ரடீசு மிகப்பெரும் தத்துவவாதியும் கூட.  ஒரு நாள் ஏற்கனவே பரிச்சயமான ஒருவர் சாக்ரடீசிடம் வந்து, 

“உங்கள் நண்பரைப் பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு செய்தியை சொல்லவா?” என்றார்.

“ஒரு நிமிடம் பொறுங்கள்”, என்றார் சாக்ரடீசு. “என்னிடம் நீங்கள் எதுவும் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறு சோதனை உங்களுக்கு. முச்சல்லடை சோதனை என்று பெயர் இதற்கு, சரியா” 

“முச்சல்லடை சோதனையா?”

Saturday, August 8, 2015

அடியாரும், ஆன்மீகமும் – 4 – பூசலாரும், ராமானுசரும்!


பவள சங்கரி
ஒருவரின் செயல்திட்பம் சரியாக அமைய வேண்டுமாயின் அவருக்கு நற்சிந்தைகளுடனான நிலையான மனத்திட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் அடியார்களின் மனத்திட்பத்தின் மகிமை பெரிதும் சிந்தித்து உணர்ந்து போற்றத்தக்கது. தாயுமானவரின், “காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ” என்ற பதத்தின் மூலமும் இதனை அறியலாம். ஆணித்தரமான அத்தாட்சிச் சாதனங்களைப் பெற்றுள்ள திருத்தொண்டர் புராண வரலாறுகளுள் முக்கியமானதாகக் கருதப்படுவது பூசலார் நாயனார் வரலாறு.
G_T3_646
பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ்
பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை
யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன
னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழ
விரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்
வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.

Wednesday, August 5, 2015

அடியாரும் ஆன்மீகமும் (5) – விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்!


பவள சங்கரி
சிகாகோ நகரின் அருங்காட்சியகத்தில் நம் நடராசர்!
சிகாகோ நகரின் அருங்காட்சியகத்தில் நம் நடராசர்!


இந்து மதத்தில், ஆன்மீகம் என்பது வெறும் பக்தி, வழிபாடு அல்லது மதம் சார்ந்த ஒரு விசயம் என்பதற்கும் மீறி, கூர்ந்து நோக்குங்கால் அறிவியல் சார்ந்த விசயமாகவும் காணமுடிகிறது. அதாவது மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானம் சார்ந்ததே என்பதை உணர முடிகிறது. ‘இந்து’ என்ற வார்த்தைக்கு பல்வேறு பொருள்கள் உண்டு. அவைகளில் முக்கியமான ஒன்று, ‘ஒருவரை உற்சாகம் இழக்கச் செய்யும் அந்த ஒன்றை அழிப்பது’ என்பதாம். அந்த வகையில் நம்மை உற்சாகம் இழக்கச் செய்கிற அவநம்பிக்கை, சுயபச்சாதாபம், சோம்பல் போன்றவற்றை அழிக்கவல்லது என்று கொள்ளலாம். இதற்கு ஆதாரமாக இருப்பதே நடராசரின் திருமூர்த்தம். ஆம் நடராசரின் காலடியில் அமிழ்ந்து கிடக்கும் சூரன்தான் நம்மிடமிருந்து உற்சாகத்தைப் பறிக்கும் அந்த தீய சக்தி. ஆக, நடராசப் பெருமான் இந்து என்பதன் பொருளாகத் திகழ்பவர் என்று கொள்ளலாம் அல்லவா?

முறமா - சல்லடையா - எது சிறந்தது?







அந்தத் தாய்க்கு தம் இரண்டு பெண் குழந்தைகள் மீதும் சம அளவிலான பாசம் என்றாலும், மூத்தவளுக்கு, எப்பொழுதும் தம் அன்னை  தமக்குப் பின்னால் பிறந்த இளையவளையே பாராட்டிப் பேசுகிறார்களே என்ற பொறாமை இருந்துகொண்டே இருந்தது. எதற்கெடுத்தாலும் அவளை உதாரணம் காட்டுவது மூத்தவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அம்மாவிடம் எப்போதும் சண்டை போட்டவாறு இருந்தாள். அன்று பொங்கல் திருநாள். தம் மகள்களுக்கு பரிசு கொடுக்க விரும்பிய தாய், அதில் சின்ன சோதனை வைக்க எண்ணி, ஒரு அறையில் இரண்டு பொருட்களை வைத்துவிட்டு, அதில் யார் எதைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதற்குத் தகுந்த பரிசுதான் கிடைக்கும் என்று சொல்லியனுப்பினார். முதலில் மூத்தவளை அந்த அறைக்குள் அழைத்தார். அவள் வந்து பார்த்தபோது ஒரு புறம் மூங்கில் செதில்களால் உருவாக்கப்பட்ட முறமும், மற்றொரு புறம் பளபளவென மின்னும் பித்தளை சல்லடையும் இருந்தது. பார்வைக்கு பளபளவெனத் தெரிந்த அந்த பித்தளைச் சல்லடையை சற்றும் யோசிக்காமல் எடுத்து வந்தாள் மூத்தவள். சரி என்று சொல்லி அனுப்பிவிட்டு இளையவளைக் கூப்பிட்டு எடுக்கச் சொன்னார் அந்தத் தாய். அவள் சற்று நேரம் சிந்தித்தவள், மெல்லச் சென்று முறத்தை எடுத்து வந்தாள்.  மூத்தவளுக்கு நமட்டுச் சிரிப்பு. விலையுயர்ந்த பொருளை எடுத்த தனக்குத்தான் விலையுயர்ந்த பரிசு கிடைக்கப் போகிறது என்ற இறுமாப்பு அவள் கண்களில் தெரிந்தது. பரிசு தரும் நேரம் வந்தது. முறத்தை தேர்ந்தெடுத்த இளையவளுக்கு விலையுயர்ந்த பரிசும், சல்லடையைத் தேர்ந்தெடுத்த மூத்தவளுக்கு குறைந்த மதிப்பிலான பரிசுமே கிடைத்ததது... ஏன் தெரியுமா?  

சல்லடையை விட முறம் ஏன் உயர்ந்தது தெரியுமா? சல்லடை நல்ல சுத்தமான பொருளை கீழே தள்ளிவிட்டு, கப்பியை தன்னிடம் சேமித்துக்கொள்கிறது... ஆனால் முறம் அப்படியில்லை. கழிவுகளை வெளியேற்றிவிட்டு, சுத்தமான நல்ல பொருளை மட்டும் தக்க வைத்துக்கொள்கிறது.. எது சிறந்தது நீங்களே சொல்லுங்களேன்...