Wednesday, June 24, 2015

கவிச்செருக்கு கண்ணதாசனின் உடன்பிறப்பு!


பவள சங்கரி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      – பாரதி.

 images (1)
கன்னித்தமிழுக்குக் காவியமண்டபம் அமைத்து
பண்ணிசையால் பூமாலையும் தொடுத்து
ஆன்மீகம், ஆனந்தம், காதல், தத்துவம், சோகம்,
சுகமென, அனைத்தும் அடித்தளமாய் அமைத்து
கவிச்சொல் வீச்சின் மூலம் இப்புவியனைத்தையும்
ஆளும் பெருங்கவி! ‘படைப்பதால் நானும் இறைவன்’
“நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை” என்ற கவிச்செருக்கு
அவன் உடன்பிறப்பு! கவித்துளிகள் காலக்காற்றில்
கரைந்தொழியும் கற்பூரமாயிராமல், எதிர்க்காற்றில்
ஏறிப்பறக்கும் காற்றாடியாய் காவியமானவன், கண்ணதாசன்!!

தம்மை மறந்து தம்மையே அதனுள் கரைத்து
தன்னூன் கலந்து உயிர் கலந்து பொருளுணர்ந்து
இசையோடு இயைந்து இனிமையும் கலந்து
கருத்துடன் கவியாய்ப் புனைந்து சிந்தையள்ளும்
வன்மையுடாயாய்! கன்னித் தமிழ்நாட்டின்
வளமையான கழனியில் விளைந்த வளமான
செங்கரும்பின் அடிச்சுவையவன்! தனிக்கனியவன்!!
தரணிபோற்றும் தங்கமகன்! மனம்தளராச் சிங்கமவன்!!! …. பவளா

Sunday, June 21, 2015

தமிழுக்கு வரும் கெய்ஷா - தமிழ் இந்து செய்தி!

பவள சங்கரி


Very happy to say that The Hindu announces the arrival of my friend Pavala Sankari 's book.
Congratulations!!!

மிக்க நன்றி, அன்புத்தோழி Subashini Tirumalai வரலாற்றுத் தகவல்கள் நிறைந்த மிகச் சுவையான, ஜப்பான் நாட்டின் மிக வித்தியாசமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நூல்!


சுட்டும் விழிச்சுடர்! – சர்வதேச யோகாசன தினம்!


பவள சங்கரி
27-suryanamaskar

யோகம் என்பது ….

சுட்டும்-விழி2-300x76

வியத்தகு ஆற்றல் பெற்ற உடலும், மனமும் இணைந்து, இசைந்து, இயங்கும் கலைதான் யோகாசனம். நம் அன்றாட வாழ்வியலில், நம்மை உற்சாகமாக கடமையாற்ற வழியமைத்து, ஆரோக்கியத்தையும், உள்ளத் தெளிவையும் ஒருசேர பேணிக்காக்கக்கூடியது. நம் வாழ்க்கை புறப்பட்ட இடம் எது என்ற தெளிவு இருக்கும் ஒருவருக்கே தாம் இறுதியில் போய்ச் சேரப்போகும் இடம் பற்றிய விழிப்புணர்வும் இருக்கும். இந்தத் தெளிவே நம்முடைய இடைப்பட்ட காலத்தில் நாம் வாழும் முறையை நிர்ணயிக்கிறது. நம் வாழ்க்கைப் பயணம் இடறின்றி அமைய சிறு தூண்டுகோலாக செயல்படுவதும் யோகாசனம் என்றும் சொல்லலாம். கீதையில் கண்ணன், சத்துவ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என மூன்றாகப் பிரிக்கிறார். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மூன்றின் ஒரு நிலையில் நின்றுதான் நம் பயணம் செல்கிறது. சத்துவ குணம் எதையும் புன்னகையோடு அலட்சியப்படுத்தும். ரஜோ குணம் பழி தீர்க்க நினைக்கும். தமோ குணம் நடந்ததை நினைத்து அழுது, கவலை கொள்ளும். இதில் ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என அந்த பின்னிரண்டு குணங்கள்தான் நம்மை அலைக்கழித்து, நம் உடல் நிலையையும் பாதிக்கச் செய்கிறது. ஆக, புலன்களை அடக்கி, ஒருமுகப்படுத்தி, பகை உணர்ச்சி என்பதே துளியும் அணுகாமல் நிதானம் காப்பது, நம் உடல்நிலை ஒரே சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமாகிறது. மனித மனம் உணர்ச்சியின் வேகத்தில் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி சூழ்நிலைகளுக்கேற்றவாறு மாற்றமடைகிறது. இந்த நிலையிலேயே துன்பங்களைப் பெருக்கும் பழிச் செயல்களும் பதிவுகளும் ஏற்படுகின்றன. இதை அறிவின் மயக்க நிலை, என்றும், மாயை என்றும் அழைக்கிறோம். இதிலிருந்து விடுபடவே நாம் எண்ணினாலும் சூழ்நிலைகள் மீண்டும், மீண்டும் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த மனித இயல்பை, இயற்கை நிலையை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த சாதானமாக இந்த யோகாசனத்தைக் கூறலாம். உடற்பயிற்சியுடன், மனப்பயிற்சியும் (தியானம்) இணைந்து தெளிவான சிந்தையை அன்றாடம் ஊக்குவிக்கக்கூடிய கலை என்றே சொல்லலாம்.