Thursday, October 13, 2016

சுட்டும் விழிச்சுடர்! – மூட நம்பிக்கை


சமீபத்தில் ஆன்மீகம் – தெய்வ நம்பிக்கை என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணை மூளைச்சலவை செய்து பட்டினி போட்டு கொன்ற சம்பவம் சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் உயிர் நீத்துள்ளார். சமண சமயத்தைச் சேர்ந்த சிறுமி ஆராதனா சம்தரியா. சமயக் கடமை என்ற பெயரில் தண்ணீர் மட்டுமே குடித்து 68 நாட்கள் தொடர் விரதம் இருந்து வந்துள்ளார். விரதம் முடிந்ததைக் குறிக்கும் வகையில் ஆராதனாவின் பெற்றோர் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துச்சென்று ‘பாரானா’ என்ற பெயரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில், தெலுங்கானா மாநில அமைச்சர் பத்மராவ் கவுட், தலைமை விருந்தினராக பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆராதனா, சென்ற ஆண்டிலும் இதேபோன்று 68 நாள் விரதம் மேற்கொண்டதை சிறார் உரிமை அமைப்பு மூலம் அறியமுடிகிறது. செகந்திராபாத்தில் நகைக்கடை உரிமையாளரின் மகளான, எட்டாம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற சிறுமி பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் இப்படிப்பட்ட ஒரு விரதத்தை மேற்கொண்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. விரதம் முடிந்து உடல் பலகீனமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அக்டோபர் 3ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.

இந்திய மக்கள் தொகையின் 0.4 விழுக்காடு உள்ள சமணர்கள் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள். சமணர்களின் முதன்மையான வழிபடு தெய்வங்கள் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் ஆவர். தீர்த்தங்கரர் என்பவர் ‘அருகபதவி’ அதாவது பேரின்ப நிலையை அடைந்தவர். தீர்த்தங்கரரை அருகர் என்று அழைக்கிறார்கள். அருகரை வணங்குபவர் ஆருகதர் என்று அழைக்கப்பட்டனர். 24ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் , மற்றும் இந்திரன், யக்ஷி, ஜ்வாலாமாலினி, சாஸ்தா போன்ற சிறு தெய்வங்களையும் சமணர்கள் வழிபடுகின்றனர். தீர்த்தங்கரர்கள் மனிதர்களாகப் பிறந்து, வாழ்ந்து உயர்நிலையை அடைந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜினகாஞ்சி,வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள அரந்தை, திறக்கோல், திருப்பாண்மலை, ஈரோடு அருகில் விசயபுரி போன்ற இடங்களில் 60க்கும் மேற்பட்ட பழைமையான சமணக் கோயில்கள் உள்ளன.


தீர்த்தங்கரர் என்றால் புலன்களையும் கர்மங்களையும் வென்றவர்கள் என்று பொருள். மனிதர்கள் முக்தி அடைவதற்கான வழியைக் காட்டியவர்கள் தீர்த்தங்கரர்கள். கடவுள் நிலை ஒன்றே என்றாலும் கடவுளர்கள் பலர். மனிதர்கள் அனைவருமே கடவுள் நிலையை அடைய தகுதி உடையவர்களே என்கிறது சமணம். இதற்கு நல்லொழுக்கம், நல்ஞானம், நற்காட்சி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என ரிஷப தீர்த்தங்கரர் வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

 சிகாகோ சமணர் ஆலயம்  – வடக்கிருந்து உயிர் துறந்தவர் –  நன்றி : செல்வன்

சமணக் கோயில்களின் அமைப்பு முறை சைவ, வைணவக்கோயில்களின் அமைப்பு முறையைப் பெரிதும் ஒத்துள்ளது. அதாவது சைவ,வைணவக் கோயில்களில் உள்ளது போலவே மூலவர், உற்சவமூர்த்தி ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சமணர்கள் திகம்பரர் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இக்கோயில்களில் உள்ள திருவுருவங்கள் ஆடையில்லாமல் அமைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. கோமதேசுவரர் இவ்வகையைச் சார்ந்தவர். சைவ, வைணவக் கோயில்களைப் போலவே சமணக் கோவில்களிலும் திருவிழாக்களும், இறைவன் திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதுமட்டுமன்றி, தீபாவளி, சிவராத்திரி போன்ற சில பண்டிகைகள், விழா கொண்டாடும் முறைகள், நாட்கள் என அனைத்தும் ஒன்றுபோல் அமைந்திருப்பதையும் அறிய முடிகிறது. முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் என்கிற ஆதிநாதர் வீடுபேறு அடைந்த நாளையே சமணர்கள் சிவராத்திரியாகக் கொண்டாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமணம்: காவல் தெய்வங்கள் விஜி சக்கரவர்த்தி
சமணம்: காவல் தெய்வங்கள்
விஜி சக்கரவர்த்தி
“சமணர்கள் இல்லாதிருந்திருந்தால் தமிழுக்கு இலக்கண இலக்கியங்கள் செம்மையாக அமைந்திருக்குமா என்றே ஐயம் எழுகிறது. தொல்காப்பியம், அதன் உரையாசிரியர் இளம்பூரணவடிகள், நன்னூல், குறள், நாலடி, சிலம்பு, அதன் உரையாசிரியர் அடியார்க்குநல்லார், சிந்தாமணி (சிந்தாமணியை கொங்குநாட்டு நூல் என்கிறார் உவேசா அவர்கள்), நிகண்டுகள் (பிங்கலந்தை பொள்ளாச்சி சிவன்பிள்ளை அச்சாக்கினார்கள்), நன்னூல் ஆசிரியர் போலவே அதன் உரைகாரர் மயிலைநாதர் கொங்கு நாட்டினர் என்ப. மயிலைநாதர் உரையைப் பின்பற்றிச் சைவபரமான உரைகள் பின்னாளில் எழுந்துள்ளன” – மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், (பக். 554-555)
இவைதான் சமண மதத்தினரின் அடிப்படை ஆன்மீகக் கொள்கைகள். இதன் அடிப்படையிலேயே ஒரு 13 வயது சிறுமியை வற்புறுத்தி, தெய்வ நிலை என்ற பெயரில் பட்டினிச்சாவு ஏற்படுத்தியுள்ளது மிகவும் கொடுமையான விசயம். சிறுமி ஆராதனாவின் இறுதி ஊர்வலத்தில், சமண மதத்தைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துள்ளார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அப்பெண்ணின் இறப்பையும் தெய்வச் செயலாகக் கருதியதோடு, தவ வலிமை பெற்ற பால யோகி என்ற முறையில் அந்த மரணத்தையும் ‘ஷோபா யாத்திரை’ என்று கொண்டாடியிருக்கிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.
சித்தர்கள், முதுபெருமக்கள் போன்றோர் உணவு, நீரின்றி கடும் தவத்தில் ஈடுபடுவது நாம் அறிந்திருக்கிறோம். அதுவும் பெரும்பாலும் பல காலங்களுக்கு முன்பு நடந்த விசயங்கள் இவை. 13 வயதே ஆன சிறுமியை வற்புறுத்தி உண்ணாவிரதம் இருக்கவைத்து மரணம் ஏற்படுத்தியதை கொலை என்றே கொள்ள முடிகிறது. சாப்பாட்டிற்கே வசதியில்லாதவர்கள்கூட செய்யத் துணியாத இப்படியொரு காரியத்தை ஆன்மீகம் என்ற பெயரில் செல்வந்தரான இவர்கள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆன்மீகம் என்பது கட்டுப்பாடுள்ள அறிவியல்தானேயொழிய அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கை அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். ஆன்மீக ஞானிகளின் சித்தாந்தங்கள், வேதங்கள் என அனைத்தும் பெரும்பாலும் அறிவியலின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதே நிதர்சனம். அதாவது அறிவியல் சார்ந்த ஆன்மீகம் மட்டுமே மனிதர்களுக்கு அமைதியையும், வெற்றியையும் அருளக்கூடியவை என்பதை உணர்ந்தால் மட்டுமே ஆன்மீகம் என்பதன் முழு பலனையும் அனுபவிக்க முடியும் என்பதே சத்தியம். தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தின் இயக்கங்களையும், அதன் தொடர்புடைய தம் வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள வேண்டியே மனிதன் ஆரம்ப காலம் முதலே ஆழ்ந்த தேடல் கொண்டிருக்கிறான். இந்தத் தேடல்களின் ஒரு பகுதியே அறிவியலாகவும், மற்றொரு பகுதி ஆன்மீகமாகவும் உருவெடுத்துள்ளன. ஒரு வகையில் ஆன்மீகமும், அறிவியலும் நெருங்கிய தொடர்புடையவையே எனலாம். அறிவியலைப் பொருத்தவரை தமது வாழ்க்கைத் தேவைகளுக்கேற்றவாறு தன்னைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்தை வளைக்க முற்படுகிறது. ஆன்மீகத்தைப் பொருத்தவரை தாம் வாழும் உலகிற்கேற்றவாறு தம்மை அனுசரித்துக்கொள்ளும் போக்கு. மனிதர் அறிவியல் சார்ந்த ஆன்மீகம் கடைபிடிப்பதே சிறந்த வாழ்வியல் நெறி. உதாரணமாக இயற்கைப் பேரழிவுகளின் சேதாரங்களை ஆன்மீக நம்பிக்கையுடன் அறிவியல்பூர்வமாக அணுகி தீர்வு காண்பது போன்றது. அதாவது ஆன்மீகம் என்பது வழிபாடுகளில் மட்டும் அடங்கிவிடுவதில் அல்ல, அதையும் மீறி சிறந்த முறையில் வாழ்ந்து காட்டுவதில் உள்ளது என்பதே சத்தியம்.
மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பை தெளிவுற விளங்குதல் அவசியம். அறிவியலுடன், ஆன்மீகமும் மனித வாழ்க்கைக்கு பெரிதும் தேவைப்பட்டாலும், ஆன்மீகத்தை குறிப்பிட்டதொரு வரையறைக்குள் வைத்து பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் வாழும் சூழல் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு சிலபல கோட்பாடுகளை ஏற்படுத்தி அதன்படி வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் பல மதத் தலைவர்களும் முக்கியமான கோட்பாடுகளை ஒதுக்கிவிட்டு, சில கட்டுக் கதைகளை பரப்பிக்கொண்டிருப்பதன் விளைவே இது போன்று மூட நம்பிக்கைகளையும், உயிர் பலியையும் ஏற்படச்செய்துள்ளன.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எப்படியாவது வாழ்க்கையின் உச்சத்தை அடையவேண்டும் என்ற வேட்கை புதைந்துள்ளது. ஆன்மாவை உணர்ந்து அமைதியான பாதையில் அடுத்தவருக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ்வதே ஆன்மீகம். இந்த ஆன்மாவை உணரும்பொருட்டு பல ஆன்மிக வழிகளை நம் முன்னோர் உருவாக்கினர். அவையாவும் நற்செயல்களை புண்ணியமாகவும், தீயச்செயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியுள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தாம் வாழுவதற்காக, தம் சுயநலத்திற்காக எத்தகைய பாவச்செயலையும் செய்யத் துணியும் மனிதரையே பரவலாகக் காணமுடிகிறது. அந்த வகையில், இந்த இளம் பெண்ணின் தந்தையின் நகைக்கடையை பிரபலப்படுத்தவே இந்த உண்ணாவிரதம் கடைபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
புதுமணப் பெண்ணைப்போல் அலங்கரித்து தங்க முலாம் பூசப்பட்ட ரதத்தில் அமர்ந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட ஆராதனாவின் ‘சந்த்தாரா’ எனப்படும் இந்த உண்ணாவிரதச் சடங்கு பத்தாவது வாரத்தை நெருங்கியபோது உள்ளூர் ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்கள் வந்துள்ளன. அத்தோடு பலர் அந்த பாலயோகியுடன் தம்படம் எடுத்துக்கொள்ளவும் முனைந்துள்ளனர் என்பதும் ஆதாரமாக உள்ளது.
இனிமேலும் இதுபோன்று ஒரு குற்றம் நடக்காமல் இருக்க வேண்டுமானால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.

http://www.vallamai.com/?p=72658 - நன்றி - வல்லமை

No comments:

Post a Comment